கோலமாவு கோகிலா / விமர்சனம்

மொத்த வாத்தியமும் முழங்கினாலும், ஒத்த வாத்தியமா ஒசந்து நிக்குமே… தப்பட்டை, அப்படி நிற்கிறார் நயன்தாரா! கண்களில் ஒரு அச்சமும் துணிச்சலும்! வார்த்தைகளில் ஒரு தயக்கமும் அழுத்தமும்! நடையில் ஒரு தளர்வும் துணிவும்! இப்படி காட்சிக்கு காட்சி ஃபுல் படமும் நான்தாண்டா என்று பிரமிக்க வைத்துவிட்டார். இன்னும் வேலைக்கார வெள்ளையம்மா, துணிக்கார துர்கா, பூக்கார பூர்ணிமா, சமையல்கார சங்கீதா என்று ரவுண்டு கட்டி அடிக்கிற அளவுக்கு ‘ஸ்டஃப்’ இருக்கிறது நயனுக்கு! ஸ்கிரிப்ட் இருக்கா கோடம்பாக்கத்தில்?

அறுபத்திரெண்டு வயசான அம்மாவுக்கு லங்க்ஸ் கேன்சர். பதினைந்து லட்சம் இருந்தால் குணப்படுத்திவிடலாம். எளிய குடும்பம். எங்கே போகும்? தன்னளவுக்கு முயலும் கோகிலாவுக்கு, கோக்கைன் கடத்துகிற வேலை வருகிறது. தேன் கூட்டில் கையை வைத்தால் தேன் மட்டுமா கிடைக்கும்? கொட்ட கொட்ட துரத்துகிறது ரவுடிக் கூட்டம். அவர்களை ஒட்ட ஒட்ட நறுக்குகிறார் நயன்தாரா. எப்படி? என்பதுதான் கோலமாவு கோகிலா. (வி ஆர் மில்லர்ஸ் என்கிற ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இப்படம் என்கிறார்கள் ஆங்கிலப்பட ஆர்வலர்கள். அடிச்ச வரைக்கும் ஓகேதான். இல்லேன்னா நயன்தாராவின் புகழ் பாடும் கூட்டத்திற்கு இப்படியொரு தீனி வாய்த்திருக்குமா?)

முட்டைக்கண்களும், மொழுக்கென்ற தோற்றமும், அப்பாவி வார்த்தைகளுமாக ஒரு பெண் வந்தால், ‘நம்பிடாதீங்கடா’ என்று சொல்லாமல் சொல்கிறது படத்தில் வரும் அத்தனை காட்சிகளும். அதுவும் அந்த ஜாகுலின், தன்னை விழுந்து விழுந்து காதலிக்கும் ஒருவனிடம் எப்படி கொக்கைனை கடத்திக் கொண்டு போகிறோம் என்று ஒப்பிக்கிற காட்சி சொரேர்.

இந்த ஆம்பிளை பசங்க மட்டும் எப்படியாம்? அழகான ஒருத்தியை பார்த்துவிட்டால் பேண்ட் சட்டை கிழிந்தாலும் பரவாயில்லை ரேஞ்சுக்கு சரண்டர் ஆவதும் கொடுமை. இவற்றையெல்லாம் முறையே நடித்து கதற விடுகிறார்கள் யோகிபாபுவும் யூ ட்யூப் புகழ் அன்புவும்.

முன்பாதியில் கொஞ்ச நேரம். பின் பாதியில் கொஞ்ச நேரம் என யோகி பாபுவின் நேரங்கள், இந்தப்படத்தின் கலகலப்பு நேரங்கள். விழுந்து விழுந்து உதவி செய்யும் இவர், கோகிலாவின் குடும்பமே சேர்ந்து க்ரைம் பண்ணிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்ததும் கொடுக்கிற பர்பாமென்ஸ்… வாவ்! கதி கலங்குகிறது தியேட்டர்.

இன்னும் கொஞ்ச காலம்தான் வாழப்போகிறோம் என்று அறிந்த பின், அந்த எதார்த்தத்தை தன் பிள்ளைகளுக்கு உணர வைக்கிற சரண்யா, கண்களில் லேசாக துக்கம் கிளம்ப காரணம் ஆகிறார். பட்… கொஞ்ச நேரம்தான். நோக்கம் கண்ணீரல்ல. கலகலப்பு என்று புரிந்து ஸ்டியரிங்கை வேறு பக்கம் ஒடிக்கிறார் இயக்குனர் நெல்சன்.

இன்ஸ்பெக்டர் சரவணன், அந்த டேனி, மொட்டை ராஜேந்திரன் என்று கவனிக்க வைக்கிறார்கள். அதிலும் டேனி, தனி ஆளாகவே நின்று ஆவர்த்தனம் செய்யலாம். அப்படியொரு மின்னல் பர்பாமென்ஸ்!

உதவி கேட்டு போகிற இடம் மட்டுமல்ல, எல்லா மட்டங்களிலும் பெண்களை ‘பெட்’ அனிமலாகவே பார்க்கிற கூட்டத்தை குறியீடாக அல்ல, நேரடியாகவே காண்பித்துவிடுகிறார் நெல்சன். அவ்வளவுக்கும் தப்பி ஒரு அழகான பெண் வாழ்வது சிரமந்தான் என்கிறது அநேக காட்சிகள்.

அனிருத் இசையில் காதலிக்கிற வயசு பாட்டு படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே வந்துவிடுகிறது. லேட்டாக வரும் அன்பர்களுக்கு படு ஏமாற்றம். நடுநடுவே வரும் துண்டு துண்டு பாடல்கள் ஒரே டெம்ப்போவில் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் வாத்திய கருவிகளின் பேரிரைச்சல்..!

நயன்தாராவை காட்டும் அந்த முதல் சீனில் தியேட்டரில் ஏதோ எம்.ஜி.ஆரையே காட்டுவது போல கைதட்டி விசிலடிக்கிறார்கள் ரசிகர்கள். இந்த கூட்டம் இருக்கிற வரைக்கும், லேடி சூப்பர் ஸ்டாராக இன்னும் நாலைந்து வருடங்களுக்கு தாங்குவார் நயன்.

புள்ளி இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன? தியேட்டர்களில் திருவிழா ‘கோலம்’!

ஆர்.எஸ்.அந்தணன்

aniruthDirector NelsonJacquelineKola mavu Kokila Reviewlady superstarnayantharasaranya ponvannanyogi babu
Comments (0)
Add Comment