கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ இன்னும் வரவில்லை. ஆனால் மாஃபியா வடிவத்தில் வந்திருக்கிறது. தனது நற்பெயரை நாசமாக்கிய நரகாசுரன் மாஃபியாதான் என்பதை சடக்கென்று புரிந்து கொண்டார் மனுஷன். ஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கும் நல்லதில்ல… படத்திற்கும் நல்லதில்ல என்பதை கலெக்ஷனும், விமர்சனங்களும் உணர்த்தினாலும், சாகக் கிடக்கிறவனுக்கு ஆக்சிஜன் ஏற்றுகிற வேலையை பார்த்தார் அருண் விஜய்.
ஊர் ஊராகப் போய் படத்திற்கு பிரமோஷன் பண்ணிக் கொண்டிருந்தார். அருண்விஜய்யின் அக்கறை மாஃபியாவை ஓட வைப்பதல்ல. சற்றே இறங்கிய தன் மார்க்கெட்டை புத்தூர் கட்டு போட்டு புதுப்பிப்பதுதான்.
இந்த நேரத்தில்தான் அந்த டவுட். சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் இதே கார்த்திக் நரேன் இயக்குவதாக இருந்த தனுஷ் படம் என்னாகும்? நல்லவேளையாக ஸ்டம்ப்பை பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டு கிரவுண்டை விட்டு வெளியேறவில்லை தனுஷ். நரேனை அழைத்து, ‘மாஃபியா பார்த்தேன். அநியாயத்துக்கு ஸ்லோமோஷன். ஓவர் மோஷன் உடம்புக்கு நல்லதில்ல. அதனால் என் படத்தில் அளவா வச்சுக்கோங்க’ என்றாராம்.
மாஃபியா விஷயத்தில் தனுஷ் சீரியஸ் ஆகவில்லை என்றாலும், ‘தம்பி… அவ்ளோ சம்பளம் முடியாது. பாதியா குறைச்சுக்கோங்க’ என்று பந்தி இலையில் கூட்டு பொரியலை குறைக்கிற வேலையில் இறங்கிவிட்டதாம் சத்யஜோதி.