‘ரஜினியின் மருமகன்’ என்ற அந்தஸ்து அவ்வளவு சாதாரணமானதல்ல. ஆனால் அதை சாதாரணமாக தட்டிக் கொண்டு போன தனுஷ், அதற்கப்புறமும் ஒரு தீராத ஆசையோடு திரிந்து கொண்டிருக்கிறார். தனது 25 ஆவது படம் என்கிற பெருமைக்குரிய ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நடிக்க வேண்டும். அந்த காட்சியில் அவருக்கு அருகில் தானும் இருக்க வேண்டும். இதுதான் தனுஷின் ஆசை.
அவரைப் பொருத்தவரை இந்த 25 என்பது மிகப்பெரிய சாதனைதான். பல ஹிட்டுகள்… சில தோல்விகள்… என்று தனுஷின் கிராஃப்புக்கும் நல்ல மரியாதை இருக்கிறது இன்டஸ்ட்ரியில். இருந்தாலும் ரஜினியின் மருமகன் என்று சொல்லிக் கொள்ளும் தன்னால் அவரை தனது ஒரு படத்தில் கூட கெஸ்ட் ரோலில் தோன்ற செய்ய முடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்ததாம். இது வெள்ளிவிழா படம் என்கிற காரணத்தை காட்டியாவது அவரை ஒரே அமுக்காக அமுக்கி விட வேண்டும் என்று நினைக்கிறாராம். தனது ஆசையை அவர் ரஜினியிடம் நேரடியாக தெரிவித்து விட்டதாகவும் தகவல் கசிகிறது.
அப்படியே ‘நீங்க நடிக்கும் லிங்கா படத்திலேயும் நான் ஒரு சீன் வரணும்’ என்றாராம் ரஜினியிடம். தனுஷின் இவ்விரு ஆசைகளையும் கேட்டு லேசாக புன்முறுவல் பூத்திருக்கிறாராம் ரஜினி. அவரே விரும்பாவிட்டாலும், எப்படியாவது ‘வேலையில்லா பட்டதாரி’யில் ஒரு காட்சியில் ரஜினியை நடிக்க வைத்துவிடுவார் அவரது மகள் ஐஸ்வர்யா.
‘கணவனே கேஷ் கண்ட தெய்வம்’ என்பதால் இந்த சலுகை தனுஷுக்கு வழங்கப்படலாம்.