மிஸ்டர் இளிச்சவாயனா கலையரசன்? பொதுமேடையில் ‘டவுட்’ கிளப்பிய விநியோகஸ்தர்!

தமிழ்சினிமா வியாபாரத்தில் நாம் எத்தனையாவது படியில் நிற்கிறோம் என்பதை உணராமலே சம்பளம் கேட்கிற ஹீரோக்களை அப்படியே அள்ளிக் கொண்டு போய் சமுத்திரத்தில் கரைத்துவிட்டால், தமிழ்சினிமா பிழைத்துக் கொள்ளும். அந்தளவுக்கு வழிப்பறி நடத்தாத குறையாக சம்பளம் கேட்கும் அவர்களில், சிலர் மட்டும் அப்பாவிகளாக இருப்பது நல்லதா, கெட்டதா? அவர்களை மிஸ்டர் ‘ஸ்மைல் வாயன்’ என்று மற்றவர்கள் அழைத்தாலும், “அது பற்றி பரவால்லைங்க” என்று அந்த ஹீரோ அன்பை அள்ளிக் கொள்வதெல்லாம் ஒரு வரம்!

‘எய்தவன்’ படத்தின் ஹீரோ கலையரசன் இந்த லிஸ்ட்டில்தான் வருகிறாராம். இந்த தகவலை இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லி பரவசப்பட்டார் சக்திவேலன். சக்தி பிலிம் பேக்ட்டரி என்கிற பிரபல விநியோக நிறுவனத்தின் சொந்தக்காரரான சக்திவேலன் கலையரசன் பற்றி சொல்ல சொல்ல, இவரை மாதிரி மாநிலத்துக்கு நாலு ஹீரோ இருந்தா, சினிமா பிழைக்கும் என்கிற நம்பிக்கை வந்தது.

அப்படியென்ன சொன்னார் சக்திவேலன்?

“தமிழ்சினிமாவில் ஒரு ஹீரோ இருக்கார். அவருக்கு கதைதான் முக்கியம். அந்தக் கதை அவருக்கு பிடிச்சுப் போச்சுன்னா, ‘நான் இந்தப்படத்தில் நடிக்கணும். சம்பளம் ஒரு மேட்டரே இல்ல’ன்னு அவரே டிக்ளேர் பண்ணிடுவார். கொடுக்கறதை வாங்கிக்கிட்டு நடிச்சுக் கொடுத்துடுவார். அந்தளவுக்கு நல்ல ஹீரோ அவர்” என்று சொல்லிவிட்டு கலையரசனை பார்க்க, அவரும் ‘இப்படி பொதுமேடையில போட்டு உடைச்சுட்டீங்களே, இனிமே வர்றவங்க முழு சம்பளத்தை கொடுக்கவா போறாங்க?’ என்பதை போலவே பார்த்தார் கலையரசன்!

அதற்கப்புறம் மைக்கை பிடித்த கலையரசன், “இந்தப்படத்திற்காக நல்ல பேமென்ட் கொடுத்தாங்க. அதையும் டப்பிங் பேசறதுக்கு முன்னாடியே கொடுத்துட்டாங்க” என்று கூற, அரங்கத்தில் ஒரே சிரிப்பலை.

‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகம் ஆகி, மெட்ராஸ் படத்தில் கைதட்டல்கள் வாங்கி, இன்று தமிழ்சினிமாவில் நல்ல இடத்திலிருக்கும் கலையரசனுக்கு இந்த நல்ல பெயர் நிலைக்கட்டும்…

https://youtu.be/vaYOYz4l0Qc

abi and abikalaiyarasans sudhakaranSakthi RajasekaransakthivelanSatna Titesshakthi film factorytamil heros salaryyeithavan tamil film
Comments (0)
Add Comment