ரொம்ப வேதனையா இருக்குண்ணே! சூரியை புலம்பவிட்ட சினிமாக்காரர்கள்…

‘நீங்க நடிச்ச படத்துலேயே உங்களுக்கு பிடிச்சது எது?’ன்னு எந்த நடிகர்களிடம் கேட்டாலும், “எல்லாமே பிடிச்ச படம்தான்” என்று பொத்தாம் பொதுவாக ஒரு பதிலை சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் தன்னையறியாமல் எட்டிப்பார்த்து, ‘என் பெயரை சொல்லேன்’ என்று சட்டையை பிடித்து உலுக்குகிற சில படங்கள் அவர்களின் சினிமா கேரியரில் இருக்கும். சூரிக்கு அப்படிப்பட்ட படமாக அமைந்துவிட்டது ‘கத்துக்குட்டி’.

பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கியிருக்கும் இப்படம், வெறும் ‘அட்வைஸ்’ சமாச்சார படமல்ல, அதையும் தாண்டிய கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். தஞ்சை மாவட்டத்தின் வாழ்வாதாரமான விவசாயத்தை காவு வாங்க கிளம்பிய மீத்தேன் வாயு திட்டத்தை முழுமையாக எதிர்த்த படம். இந்த படத்திற்காக சூரியிடம் கேட்கப்பட்ட கால்ஷீட் வெறும் 12 நாட்கள்தான். ஆனால் படம் வளர வளர, இன்னும் இன்னும் என்று தேதிகள் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் சரவணன். இது தன் வாழ்வில் ரொம்ப முக்கியமான படம். பத்து இருபது வருஷங்கள் கழித்துக்கூட நினைச்சு பார்க்கிற படம் என்பதை புரிந்து கொண்ட சூரி, கேட்கும்போதெல்லாம் நெருக்கி நெருக்கி தேதிகளை கொடுத்திருக்கிறார்.

மேனேஜர்களை விட்டு பேச விட்டால், அவர்கள் மற்ற கம்பெனிகளிடம் கறார் காட்டுவது போல காட்டுவார்கள் என்பதால், இந்த படத்திற்கு தேதிகள் கொடுப்பது, சம்பளம் வாங்குவது (?) போன்ற விஷயங்களை நேரடியாக தன் கண்ட்ரோலிலேயே வைத்துக் கொண்டாராம்.

“படம் ரிலீசாயிருச்சுண்ணே. வாட்ஸ் அப்ல அப்படியே உருகி உருகி பேசி எனக்கு மெசேஜ் போடுறாங்க. போற இடத்துலெல்லாம் கொண்டாடுறாங்க. சந்தோஷமா இருக்குண்ணே. எல்லா ஊர்லேயும் சேர்த்து இன்னும் ஐம்பது தியேட்டர்கள் எக்ஸ்ட்ராவா போட்ருக்கோம். இந்த படத்தின் பிரமோஷனுக்கு வரணும்னு சொன்னார். சரவணன். எங்க வேணும்னாலும் வர்றேன். அதோ அந்த புளிய மரத்துக்கிட்ட போய் கத்துக்குட்டி நல்ல படம்னு சொல்லிட்டு ஓடியான்னு சொல்லுங்க. சொல்லிட்டு ஓடியார்றேன் என்று இன்னும் கூட தேதிகளை கொடுத்துகிட்டேயிருக்கேன். அவரா போதும்னு சொல்ற வரைக்கும் இந்த படத்துக்கு என்னோட தேதிகள் இருந்துகிட்டேயிருக்கும்ணே…” சொல்லிவிட்டு ஆசுவாசமாகிறார் சூரி.

ஆனால் அவரை ஆசுவாசப்படுத்த விடாத இன்னொரு சமாச்சாரமும் இருக்கிறது. “அண்ணே… சேலம் கலெக்டர் குடும்பத்தோட தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்த்துட்டு தியேட்டர் ஓனரிடம் ரொம்ப பாராட்டிட்டு போனாராம். இவ்வளவு பேரு கொண்டாடுற ஒரு படத்தை இதே இன்டஸ்ட்ரியில் இருக்கிற சக நடிகர்கள் பாராட்டுவாங்கன்னு நினைச்சேன். எத்தனையோ படங்கள்ல என்னோட நடிப்பை பார்த்துட்டு, நல்லாயிருக்குடா சூரின்னு சொன்ன ஒரு அண்ணனும் இந்த படம் பற்றி ஒண்ணுமே சொல்லலேண்ணே, அது ஏண்ணே…” என்றார் சூரி.

கருத்துச் சொன்னா எவன் மதிக்கிறான்?

KathukuttyMeethen gasRaSaravananSlidesooriTanjure Farmers
Comments (0)
Add Comment