வடசென்னை மீனவர்களை டென்ஷனாக்கிய வெற்றிமாறன்!

இன்று திரைக்கு வந்திருக்கும் வடசென்னை படம், ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், கரும்பு சாறில் காட்டுப் பல்லி விழுந்த கதையாக இப்படத்தில் வரும் ஆபாச வசனங்களுக்கு அருவருப்பு முகம் காட்டுகிறார்கள் அதே ரசிகர்கள். பெண்களை தியேட்டர் பக்கம் வர விடாமல் செய்யும் இந்த வசனங்களை சென்சார் எப்படி அனுமதித்தது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

இந்த ஒரு கொடுமை போதாது என்று அடிஷனலான இன்னொரு வயிற்றெரிச்சல். வடசென்னை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், படம் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலில் வைத்தே வசவு பாடிவிட்டு அதை வீடியோ பதிவாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். என்னவாம்? வடசென்னைன்னா இந்த சினிமாக் காரங்க என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க? எங்கள்ல படிச்சவங்க இல்லையா? ஐடி வேலைக்கு போறவங்க இல்லையா? ஏன் இப்படி எந்நேரமும் கத்தியும் கலவரமுமா திரியுற ஆட்களாக காட்றாங்க?

அது கூட பரவாயில்ல. எங்க வீட்டு பெண்கள் எல்லாம் இப்படிதான் அசிங்க அசிங்கமா பேசுறாங்களா? வடசென்னையிலேர்ந்து வேறு இடங்களுக்கு வேலைக்குப் போகும் பெண்களை இனிமேல் இந்த சமூகம் எந்த நோக்கத்தில் பார்க்கும்? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய அவர்கள், படத்தில் மீனவர்களையும் படகுகளையும் காட்டியதை பற்றியும் தங்கள் காட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஏதோ எங்க படகுகளை நாங்க கள்ளக்கடத்தலுக்கு மட்டும் பயன்படுத்துற மாதிரி காட்றீங்களே, நாங்க தொழிலுக்கு போற மாதிரி ஒரு சீன் காட்ட மனசில்லையே உங்களுக்கு என்று முடிகிறது அவர்களின் குமுறல்.

இந்த குமுறல் தியேட்டர் வாசலோடு முடியாது போலிருக்கே?

ameerAshwarya RajeshDenial BalajidhanushSamuthirakaniVadachennaivetri maranwunderbar
Comments (1)
Add Comment
  • செந்தமிழ்செல்வன்

    அனைத்து தமிழக மக்களின் ஆதரவுடன், வடசென்னை படம் வசூலும் மாபெரும் சாதனை படைத்து, வெற்றிகரமாக ஓடி வருகிறது.
    போடா டேய்…..