திடீர் மரணங்கள் தருகிற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவில்லை தமிழ் திரையுலகம். அண்மையில் மறைந்த ஜே.கே.ரித்தீஷின் நினைவுகள் இன்னும் கோடம்பாக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் இன்றும் ஒரு அகால மரணம்!
நிஜமாகவே நாபிக் கமலத்திலிருந்து கிளம்புகிற சிரிப்பை தமிழ்சினிமாவில் பரவ விட்ட ஞானி கிரேஸி மோகன் பிற்பகல் சுமார் 2 மணியளவில் காலமாகிவிட்டார். திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் விண்ணுலகம் சென்றுவிட்டார்.
யார் மனதையும் புண்படுத்தாத எழுத்தால் மட்டுமல்ல, யாரையும் புண்படுத்தாத செயலாலும் எல்லாரையும் கவர்ந்த கிரேஸி மோகன், கமல்ஹாசனின் தோஸ்த் என்பது தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வரம். கிரேஸியும் கமலும் இணைந்து கை வைத்த படங்கள் 99 சதவீதம் ஷியூர் ஹிட். அதுமட்டுமல்ல. திரும்ப திரும்ப பார்த்தாலும் திகட்டாத ரகம்.
“சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்கிற அளவுக்கு நாங்கள் சகோதரர்கள்” என்று கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருக்கிறார் கமல். ஒட்டுமொத்த திரையுலகமும், அந்த சிரிப்புச் சித்தனை வழியனுப்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இனி ஒரு கிரேஸி மோகன் கிடைக்கவே போவதில்லை. அவரது இடம், எப்போதும் காலியாகவே கிடக்கும்.