விடமாட்டோம்… விஷால் வீட்டில் கூடிய குட்டி ஹீரோக்கள்!

நடிகர் சங்க தேர்தல் ஜுலை 15 ந் தேதி நடைபெறவிருக்கிறது. தேங்காய் பத்தை பெரிசா, தேங்காய் ஓடு பெரிசா? என்று அடித்துக் கொள்ளாத குறையாக நிற்கிறார்கள் சரத்குமார் அணியும், விஷால் அணியும். ‘நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிவிட்டுதான் பெண்டாட்டி கட்டுவேன்’ என்று விஷால் அடம்பிடிக்கிறார். அவர் சம்சாரி ஆவாரா? இல்லை சன்னியாசி ஆவாரா என்பதை தீர்மானிக்கும் தேர்தலாகவும் பார்க்கப்படுகிறது இந்த முறை.

தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜுலை 15 ந் தேதி வேலை நாள். பொதுவாகவே தேர்தல்கள் விடுமுறை நாளில், இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இரண்டாவது ஞாயிற்று கிழமை நடந்தால்தான் எல்லாரும் வோட்டு போட ஏதுவாக இருக்கும். இதை வலியுறுத்திதான் தேர்தல் தேதியை ஜுலை 15 ந் தேதி நடத்தக் கூடாது என்றும், இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கண்காணிக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் விஷால். நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறதோ? அதற்கிடையில் வியாழன் மாலை விஷால் வீட்டில் நடிகர்கள் கார்த்தி, நாசர், ஆர்யா, பொன்வண்ணன், மனோபாலா, கருணாஸ் போன்றவர்கள் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

தேர்தல் தினத்தன்று ஏதேனும் கலவரம் நடக்கவும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுத்தார்களாம் அவர்கள். போலீஸ் கமிஷனரை சந்தித்து உதவி கேட்க வேண்டும் என்று பேசப்பட்டதாம் அப்போது. புதிய நடிகர்கள் நடிகர் சங்கத்தில் நுழைந்து பொறுப்பெடுத்துக் கொள்வது நல்ல விஷயம்தான். ஆனால் இரவு பகல் பாராது பிறருக்காக உழைக்கிற மனசுள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க வேண்டும். சுய விருப்பு வெறுப்புகள் இதில் கூடவே கூடாது என்றும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

பார்க்கலாம்… நடிகர் சங்கத்திற்கு வரப்போவது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்று?

courtdrama artistselectionmarriageNadigarsangamradharavisarathkumarsecond sundaySlidevaralaxmivishal
Comments (0)
Add Comment