எனக்கு புஷ்பா புருஷனை புடிக்கும்! அதர்வா பேட்டி

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் அதர்வாதான் ஹீரோ. அவர் முதன் முறையாக நடிக்கும் முழு நீள காமெடிப்படம் இது. படம் பற்றி அதர்வா என்ன சொல்கிறார்? இதோ-

இதுவரை நான் வெவ்வேறு வித்யாசமான கதையில் நடித்துள்ளேன். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்த பிறகு தான் எனக்கு காமெடி நன்றாக வரும் , காமெடி எனக்கு பிடிக்கும் என்று எனக்கே தெரியும். நான் ஆக்சன் கதை ஒன்றில் நடித்தால் தொடர்ந்து அதே போன்று ஆக்சன் கதைகள் வந்து கொண்டே இருக்கும். பரதேசி போன்ற ஒரு படத்தில் நடித்தால் அதை போன்ற கதைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

எனக்கு ரொம்ப நாளாக காமெடி கலந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் நிறைய காமெடி கதைகள் கேட்டுள்ளேன் அதை கேட்கும் போது எனக்கே சிரிப்பு வராது.முதலில் எனக்கு சிரிப்பு வந்தால் மற்றவர்களுக்கும் சிரிப்பு வரும். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் கதையை கேட்கும் போது முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது இந்த படத்தில் நான் நடிக்க போறேன் என்பது. இந்த கதையை கேட்கும் போது ஓபன் மைண்டாக தான் கேட்டேன் , முதல் 10 நிமிடத்தை அவர் எனக்கு கூறியவுடன் முடிவு செய்துவிட்டேன் இந்த கதையில் நான் நடிக்க போகிறேன் என்பதை. மற்றவை எல்லாம் எனக்கு போனஸ் தான்.

ஜெமினிகணேசன் சார் என்றால் ” லவர் பாய் ” ” என்று எல்லோரும் சொல்லுவார்கள் அவர் ஒரு ” காதல் மன்னன் “. அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நான் ஒரே ஒரு நாயகியுடன் நடிக்க முடியாது. என்னுடைய தந்தை காதல் சொல்லாத மன்னன். என்னுடைய தந்தை நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ” இதயமே இதயமே ” பாடலை ஒரு காட்சியில் வைத்தது இயக்குநரின் ஐடியா. இதை நாங்கள் முதலேயே பிளான் செய்து எடுக்கவில்லை. அந்த காட்சியை படமாக்கும் போது இயக்குநர் கூறிய ஐடியா தான் இது. அதே போல் தான் ” நியாயமாரே ” என்ற வார்த்தையை சூரி ஒரு காட்சியில் கூறுவார்.

நான் படத்தில் நடித்த 5 கதாநாயகிகளுடனும் மகிழ்ச்சியோடு தான் நடித்தேன். எனக்கு பெண்கள் ரசிகர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்றாகும். நான் சினிமாவுக்கு வரும் போது என்னுடைய தந்தையின் படங்களை பார்த்து வரவில்லை. அப்பாவும் அவருடைய படங்களை பார்க்கவேண்டாம் என்று தான் கூறுவார். அப்பாவின் படங்களில் என்னால் நிச்சயம் நடிக்க முடியாது. அவர் இருந்திருந்தால் என்னுடைய படங்களை பார்த்து என்ன சொல்லி இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் , இதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லி தர யாருமில்லை. நான் நடித்த ஒவ்வொரு படங்களும் புதுமையான படங்கள் தான். சூரி அண்ணாவோடு நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம்.

அவர் நடித்த புஷ்பா புருஷன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை போன்ற ஒரு காமெடி படத்தில் அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது அது எனக்கு இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது என்றார் அதர்வா முரளி.​

adharvaComedy StoryGeminiGemini Ganesanum Suruli RajanumGGSRkadhal mannanMuralisoori
Comments (0)
Add Comment