‘ தொலைச்சுருவேன்.. ‘ ஐ ட்ரெய்லரை கசியவிட்டவர்களை காய்ச்சி எடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன்

கோடம்பாக்கத்தில் திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரே ஆச்சர்யம்! ‘நேற்று ஐ பட ட்ரெய்லர் பார்த்தேன். பிரமாதம்ப்பா…’ இந்த வார்த்தைகளை யாராவது நிருபர்களோ, அல்லது மீடியேட்டர்களோ, அல்லது விநியோகஸ்தர்களோ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம்… ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆர்வம்தான். தன்னை தேடி வருகிற எல்லாரிடமும் ‘இந்த ட்ரெய்லரை பாருங்க’ என்று தனது அலுவலகத்திலிருக்கும் அகன்ற திரை டி.வி யில் ஒளிபரப்புகிறார். நிஜமாகவே பிரமிப்பை ஏற்படுத்துகிற ட்ரெய்லர்தான் அது.

எல்லாரும் ஒண்ணு போல இருப்பாங்களா? கடந்த சில தினங்களுக்கு முன் சில இணையதள நிருபர்கள் சிலருக்கும் இந்த ட்ரெய்லரை ஆர்வத்தோடு திரையிட்டு காண்பித்தார் ரவிச்சந்திரன். அந்த நேரத்தில் யாரோ ஒரு ‘பின் வால் பிராணி’, அதை தன் செல்போனில் பதிவு செய்திருக்கிறது. நம்பிக்கையோடு நம்மிடம் காட்டுகிறாரே, அதை செல்போனில் பதிவு செய்கிறோமே என்கிற அறிவு வேண்டுமல்லவா? பதிவு செய்ததோடு நில்லாமல், அதை யூ ட்யூப்பில் ஏற்றிவிட, பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார் ஆஸ்கர் ரவி.

யார் யாரெல்லாம் நமது ட்ரெய்லரை பார்த்தார்கள் என்று லிஸ்ட் போட்டவர், அத்தனை பேரையும் ஆபிசுக்கே வரவழைத்துவிட்டார். நேரில் வந்தவர்களுக்கு செம மண்டகப்படியாம்… ‘யார்னு கண்டு பிடிச்சேன்னா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன். என்னை பற்றி தெரியும்ல…?’ என்று அவர் கோபம் காட்ட, படம் பார்க்க போனவர்களே இப்போது துப்பறியவும் ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்க வந்தப்ப நீங்க லைட்டை போட்டுதான் படத்தை காட்டினீங்க. பட்… இந்த திருட்டு வீடியோவில் லைட்டுகள் நிறுத்தப்பட்டு படம் இருட்டில் ஓடுகிறதே… நல்லா விசாரிங்க. அது நாங்க இல்ல’ என்று தப்பித்தார்கள் சில இணையதள நிருபர்கள்.

எப்படியோ? ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அந்த சுளுக்குக்குரிய சுந்தரபாண்டியன் இங்கதான் எங்கேயோ ஒளிஞ்சிருக்கணும்! என்ன பொழப்புடா இது?

amy jacsonar rahmanascar ravichandranayedirector shankariSlidevikram
Comments (0)
Add Comment