ஐயோ கவிதா…! மூணு மணி நேரமும் அதேதானா?

தலைப்பை படிச்சுட்டு தப்பு தப்பா யோசிச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல! ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சுந்தர்சி சொன்ன சுவாரஸ்மான விஷயம்தான் இது. முதலில் ஹ.நா.பே.பே பற்றி ஒரு முக்கியமான தகவல். இது பேய் படம். இதிலென்னய்யா முக்கியம் இருக்கு? பேய் படம்தான், ஆனால் இதுவரை வந்த பேய் படங்களை போல இருக்காதாம். உத்தரவாதம் பை சுந்தர்சி அண்டு டைரக்டர் எஸ்.பாஸ்கர்.

இந்த பாஸ்கர் நாளைய இயக்குனர் தொடரில் வெற்றி பெற்றவர். அப்பவே இவரது குறும்படங்களை பார்த்து இவருக்கு ரசிகர் ஆகிவிட்டாராம் சுந்தர்சி. “ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க. நம்ம கம்பெனியில் தயாரிக்கலாம்” என்று சுந்தர்சி நம்பிக்கையோடு அழைக்க, இவர் சொன்னது பேய்க்கதையல்ல. வேறொன்று. ஆனால் “பேய்க்கதை ஒண்ணு இருக்குன்னு சொன்னீங்களே, அதை சொல்லுங்க” என்று கேட்டு வாங்கிய சுந்தர்சி அசந்ததே இது வழக்கமான பேய் படமாக இல்லை என்பதால்தான்.

வைபவ், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா, மற்றும் ஓவியா ஆகியோர் நடித்திருக்க, அடிஷனல் அட்ராசிட்டி பண்ணியிருக்கிறார்கள் வி.டி.வி கணேஷும், சிங்கம்புலியும், யோகி பாபுவும். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிங்கம்புலி பேசியதை மட்டும் கேட்க முடிந்தால் கேட்டு ரசிப்பது ரசிகர்களின் புண்ணியம். அவ்வளவு சிறப்பு. ஆரவாரம்.

ஹீரோயின் ஐஸ்வர்யாவிடம் கதை சொன்னபோது இன்டர்வெல் வரைக்கும் அதில் பேயே வரலையாம். “என்ன சார். பேய்ப்படம்னு சொன்னீங்க. ஆனால் பேயே இன்னும் வரல” என்று அவர் கேட்க, செகண்ட் ஆஃபில் போட்டு மிரட்டிவிட்டாராம் பாஸ்கர். “செம ஜாலியான பேய். சிரிச்சு சிரிச்சு ரசிக்கக் கூடிய பேய். அதே நேரத்தில் பேய் படங்களுக்குரிய அச்சமும் பயமும் படத்தில் நிறைய இருக்கு” என்றார் ஐஸ்வர்யா.

“நான்தான் தயாரிப்பாளர். இருந்தாலும் ஒரே ஒருநாள்தான் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். அதுவும் எப்படி எடுக்கிறாங்கன்னு பார்க்கறதுக்காக அல்ல. எல்லாரையும் ஒரு மரியாதை நிமித்தமா மீட் பண்ணலாம்னுதான். மூணு மணிக்கு போனேன். ஆறு மணிக்கு ஷுட்டிங் முடியற வரைக்கும், ‘ஐயோ கவிதா…’ ங்கிற ஒரே டயலாக்கை வைபவ் சொல்ற மாதிரி எடுத்துகிட்டேயிருந்தார் பாஸ்கர். நான் கிளம்பி வந்துட்டேன். இப்ப படமா பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றார் சுந்தர்சி.

“படத்தில் ‘சிலாக்கி டும்மா’ என்றொரு பாடல் இருக்கிறது. சாவு வீட்டுல ஒரு ஹீரோயின் குத்தாட்டம் போட்ட மாதிரி எந்த படமும் வந்ததேயில்ல. அந்த பெருமை எனக்குதான்” என்றார் ஐஸ்வர்யா. உங்க பெருமையை விடுங்க. அந்த பாடல் எழுதிய பையனையும் அப்படியே பேக் பண்ணி ஆடியோ சிடி கூடவே அனுப்பி வச்சா, பொழிப்புரை, பதவுரையெல்லாம் சொல்லி இந்த தமிழ் சமூகத்தின் சந்தேகம் போக்குவார்.

செய்வீங்களா…செய்வீங்களா…?

AshwaryaBaskarHello Naan Pei PesurenNaalaiya iyakkunaroviyasiddharth vibinsilakki dummaSlidesundarcvaibav
Comments (0)
Add Comment