இது ஒரு துவக்கமே இனி இல்லை கலக்கமே

கொம்பை பிடித்தவனுக்கு கொம்பு… திமிலை பிடித்தவனுக்கு திமில் என்று காளையின் எல்லா ஸ்பரிசத்திலும் தன் உணர்வாகி பொங்கி பிரவாகிக்கிறான் தமிழன். இதே எழுச்சி எல்லாத்துலேயும் வரணும். வருமா? குருமா? சரிம்மா? போம்மா? என்றெல்லாம் சில இடங்களில் சிலரால் கேள்விகள் முன் வைக்கப்பட்டாலும், இது காளை இணைத்த கூட்டம். நாளைக்கும் திமிறிக் கொண்டு நிற்கும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறான் ஒவ்வொரு இளைஞனும்!

இந்த பெரும் போராட்டத்திற்கு தெம்பு கொடுக்கிற விதத்தில் மெரீனாவில் பாட்டும் பறையிசையும் விண்ணை பிளக்கிறது. என்னால் முடிந்தது… என்று இட்டிலிகளோடு வருகிறது ஒரு குடும்பம். என்னால் முடிந்தது… என்று பழக் கூடையோடு வருகிறது ஒரு குடும்பம். இப்படி வயிற்றுக்கு உணவளிக்கும் கூட்டத்தில், செவிக்கு உணவளிக்க வந்திருக்கிறது கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் இணைந்த கூட்டம் ஒன்று.

ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி, சினேகன், தாஜ்நூர், அஸ்மின், வர்ஷன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் பாடல்கள் ஆங்காங்கே போராட்ட களத்தில் ஒலித்து வரும் நிலையில், பத்திரிகையாளரும் உதவி இயக்குனருமான சு.செந்தில்குமரனின் வலிமை மிக்க வரிகளுக்கு இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் இசையமைக்க, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய, ‘இதுதாண்டா ஜல்லிக்கட்டு’ என்ற பாடல் வெளியாகியிருக்கிறது.

மெட்டும் வரிகளும் போட்டி போட்டுக் கொண்டு நரம்பை புடைக்க வைக்கும் இப்பாடலை வயதை வென்ற இஷ்டாவதானி டி.ராஜேந்தர் வெளியிட்டு இக்குழுவினரை பாராட்டியும் இருக்கிறார்.

இதோ அப்பாடல் வரிகள்-

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !
தலையில் எவனும் கைய வச்சா
தவிடு பொடியாக்கடா !

பல்லவி

கொம்பைக் கூர் சீவி
கூருக்கு நேர் நின்னு
தாவிப் புடிப்போமடா !

அம்பா பாய்கின்ற
காளையை வெறும் கையால்
அணைச்சுப் புடிப்போமடா !

எங்க வீட்டுக்குள்
இன்னொரு பிள்ளையென
வாழும் கொலசாமிடா – அத

எப்படி வளக்கனும்னு
எனக்கு சொல்லித் தர
நாயே நீ யாரடா !

ஏறு தழுவுகிறோம்
என்ற வாரத்தையில்
இணையற்ற பண்பாட்டை
புரிஞ்சிக்கடா !

கூறு கெட்ட சில
கோட்டான் கூட்டத்தால
ஜல்லிக்கட்டு ஒரு நாளும்
அழியாதடா !

சரணம் 1
——————

காளை மாடு ஒன்னும் கரடி புலி சிங்கம் இல்ல
கபோதி புரிஞ்சிக்கடா

எங்க உழவனுக்கு எந்நாளும் துணையாகும்
ஜீவன் அதுதானடா !

பழகி விட்டா சிறு பச்ச புள்ள
அடிச்சா கூட அத வாங்கிக்கும்டா

புதுசா வந்து நீ கைய வச்சா
பொரட்டிப் போட்டு கொண்டாடுமடா !

காளைக்கும் தமிழனுக்கும் இருக்கிற பந்தமே
காலத்தை வென்றதொரு வரலாறடா !

ஒழுங்கா குளிக்கவே தெரியாத பயபுள்ளக
எங்கள குறை சொல்லக் கூடாதடா !

சரணம் 2
——————

மாணவ தமிழ்க் கூட்டம் மனசு வச்சு எழுந்தாலே
,மலையும் குழியாகும்டா

கன்யா குமரி முதல் மெரீனா சென்னை வரை
பொங்குது தமிழ் வீரம்டா !

சாதி மத சதி அரசியலால்
பிரிஞ்ச தமிழன் இன்று ஒண்ணா ஆனான்

சூது வாது சொல்லி பிரிச்சு வச்ச
துரோகி எல்லாம் தூள் தூளா போனான் .

இது ஒரு துவக்கமே இனி இல்லை கலக்கமே
எல்லா திசையிலும் வெற்றி நமக்கே

நட்புக்கு வணக்கமே பகைவனை அழிக்குமே
புதுசா பொறந்திருக்கும் இளைஞர் இயக்கமே !

பாடலைக் கேட்க / காண

https://www.youtube.com/shared?ci=DnJbX7awb9s

 

alanganallur jallikattuBullscentral govt.jallikattularancemadurai thamukkamnadigar sangamo panneerselvampetaSelf-promotionsimbustate govt.students powerstudents revolutionTamilnadu politicsvijay sethupathi
Comments (0)
Add Comment