அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா போல ஒரு ஆளுமையை இனி ஜென்மத்திலும் பார்க்க முடியாது. அர்ஜுனன்களை மட்டுமல்ல, பீமன்களையும் காலில் விழ வைத்து கதற விட்ட ஒரே தலைவி அவர் மட்டும்தான். அவர் இருந்த தமிழகத்தையும் அவர் இல்லாத தமிழகத்தையும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்யாசங்களோடு அறிந்து தெளிகிறார்கள் மக்கள். நீட், மேகதாது, ஸ்டெர்லைட், மீத்தேன் என்று எந்த அழிவையும் உள்ளே அனுமதிக்காத காவல் தெய்வமாகவே இருந்தார் அவர் என்பதை இப்போதுதான் புரிந்து கவலைப்படுகிறது ஜனம்.
அவர் மறைந்தபின் அவரது வாழ்க்கை வரலாற்றை எடுக்கக் கிளம்பிய சில படைப்பாளிகள், ஜெ.வின் சிலையை வடிவமைத்த லொடுக்கு பாண்டி போல இதையும் எடுத்து தொலைத்துவிடுவார்களோ என்கிற அச்சமும் கூடவே எழுந்தது. ஏனென்றால் இவர்களின் முந்தைய படங்கள் அப்படி. இந்த நேரத்தில்தான் அச்சப்பட்டோர் மனதில் ஆறுதலை வார்த்திருக்கிறார் கவுதம்மேனன்.
ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ் ஆக எடுக்கவிருக்கிறார். இதற்கான ஷுட்டிங்கும் துவங்கிவிட்டது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் போட்டு படம் எடுக்க துவங்கியிருக்கிறார். ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், எம்.ஜி.ஆராக மலையாள நடிகர் இந்திரஜித்தும், வி.என்.ஜானகியாக முன்னாள் நடிகை வனிதாவும் நடிக்கவிருக்கிறார்கள்.
கிட்டதட்ட 30 மணி நேரம் ஒளிபரப்பாகும் விதத்தில் திட்டமிட்டிருக்கிறாராம். எடப்பாடி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அத்தனை பேர் ஜாடையிலும் ஆள் பிடித்துவிட்டார்கள். மளமளவென நடைபெறும் ஷுட்டிங்கில், தீபாவாக நடிக்கப் போவது யாரோ?
குட்டிம்மா ரெடியா? குட்டிம்மாவின் குலக்கொழுந்து மாதவன் ரெடியா? இந்த தம்பதிகளின் தொண்டர் படையெல்லாம் குவிஞ்சுருச்சா? அதை தெரிஞ்சுக்கதான் ரொம்ப ஆர்வமா இருக்கு தமிழ்தேசம்!