காவேரிக்காகதான் போனாரா கமல்?

சந்தேகத்தின் நிழல் விழாமல் ஒருவராலும் அரசியல் செய்ய முடியாது. ஆணானப்பட்டவர்களே அவல் தின்னும்போது கமல் எம்மாத்திரம்? இன்று கர்நாடகாவுக்கு போயிருக்கும் கமலுக்குப் பின்னால் வண்டி வண்டியாக வஞ்சனை பேச்சு. “அவர் காவேரி பிரச்சனைக்காக மட்டும்தானா கர்நாடகா போயிருக்கார்? எதற்கும் நல்லா விசாரிங்கப்பா” என்கிறது கோடம்பாக்கம்.

முதுகுக்கு பின்னால் மொத்துவிழும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த கமல், பிளைட் ஏறுவதற்கு முன்பே ‘பளிச்’சிட்டு விட்டு போயிருக்கிறார். என்னவென்று? “கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம், சினிமா பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டேன்” என்று.

இருந்தாலும் எதிர் கோஷ்டிகள் கிளப்பிவிடும் சில சந்தேகங்களை அப்படியே விட்டுவிடுவது அநியாயம் என்பதால், அது பற்றியும் கொஞ்சம்.

ஆகஸ்ட்டில் வெளியாகப் போகிறது விஸ்வரூபம்2. ரஜினி கமல் இருவருக்குமே கர்நாடக சினிமா ஏரியா தடை விதித்திருக்கிறது. “இவ்விருவரின் படங்கள் இனிமேல் எப்போது வந்தாலும் நாங்கள் அதை வெளியிட மாட்டோம்’ என்று கூறியிருக்கும் கர்நாடக பிலிம் சேம்பர், முதல் கட்டமாக காலாவுக்கு கட்டையை கொடுத்திருக்கிறது. அடுத்து விஸ்வரூபம்2 தானே?

கமல் ரஜினி இருவருக்குமே கர்நாடகாவில் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கொழுத்த வியாபாரமும் இருக்கிறது. இந்த நிலையில் லம்ப்பாக ஒரு அமவுன்ட்டை இழப்பதென்பது சொந்த சதையை பிய்த்து காக்காய்க்கு போடுவதற்கு சமமானதாச்சே?

சரி.. சரி… கமல் குமாரசாமி சந்திப்பில் சினிமா பற்றி ஒரு வார்த்தை இல்லை. நம்பிட்டோம். விடுங்க!

Cauveri Management BoardCauvery IssueCauvery Melanmai AnaiyamKaala Baned KarnatakakamalhaasanKarnataka CM KumarasamyViswaroopam Baned KarnatakaViswaroopam2
Comments (0)
Add Comment