நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்? இசையமைப்பாளரை பதற விட்ட கமல்!

‘பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தொண்டர்கள் துள்ளலுடன் வேலை பார்க்க… கட்சிகளுக்கும் பாடல்கள் தேவைதானே? அப்படி துள்ளுகிற இசையை புதிய கட்சியான மக்கள் நீதிமய்யத்திற்கு அமைத்து, கமல்ஹாசனை கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

சினேகன் வரிகளில் ஆறு அதிரடியான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அவர். இந்த பாடல்கள் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இங்குதான் “மாலை வேண்டாம். பொன்னாடை வேண்டாம். கட் அவுட்டுகள் வேண்டாம். பேனர்கள் வேண்டாம்” என்று ஏகப்பட்ட ‘டாம்’களை அடுக்கினார் கமல். மக்களுக்கு இடையூறு செய்யும் எதுவும் வேண்டாம் என்று சொல்கிற தலைவர்களை பார்ப்பதே அரிதான காலத்தில் கமலின் இந்த …டாம், நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

செம ஜாலி மூடில் இருந்தார் கமல் என்பதை அவரது சிற்றுரையில் உணர முடிந்தது. முக்கியமாக இந்த விழாவின் நாயகர்களான சினேகனையும் தாஜ்நூரையும் பற்றி அவர் பேசியது சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.

“எல்லாருக்கும் முன்னாடி வந்தவர் சினேகன். அட்வான்ஸ் புக்கிங் பண்ணிவிட்டார். நான் எந்த ரூட்ல போகப் போறேன் என்பதை பிக்பாஸ் வீட்ல இருக்கும்போதே புரிஞ்சுகிட்டவர் அவர். நான் வெளியில் வந்ததும் முதல் வேலை உங்களோட சேர்வதுதான் என்று சொன்னார்”

“தாஜ்நூரை அவர் ஒல்லியா இருந்த காலத்திலிருந்தே அறிவேன். திறமையும் எடையும் நாளுக்கு நான் கூடிக்கொண்டே போகிறது. அவரை பார்க்கும் போதெல்லாம் நூர்னு கூப்பிடுறதில்ல. இருநூறு… முன்னூறுன்னு கூப்பிடுவேன். இதை இந்த கூட்டத்தில் சொன்னால் எடை குறைப்பார்னு நம்புகிறேன்” என்று கமல் சொல்ல கூட்டத்தில் பெருத்த கரகோஷம்.

ஒரு தலைவர், தன்னை சார்ந்தவர்களை சட்டாம்பிள்ளை மனப்பான்மையோடு அணுகாமல், நண்பனை போல அணுகுவதுதான் சரி என்று நாட்டுக்கு சொல்வதை போல இருந்தது கமலின் பேச்சு.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கார் டயரை விழுந்து கும்பிட்ட ஊரில், இதெல்லாம் புதுசாகவே தெரிகிறது.

தொடரட்டும் கமலின் அன்பும் கேலியும்!

IDHU NAMMAVAR PADAI" Songskamalhaasanlyricist snehanMakkal Neethi MaiamMusic director Tajnoor
Comments (0)
Add Comment