ஒரே கார்த்தி ஒரேயடியாய் புகழ் மாலை!

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வந்தால், அதில் ஒன்று கால் ஃபிராச்சர் ஆகி கட்டையை ஊன்றி நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஆனால் ரெண்டுமே சூப்பர்ப்பா என்று கொண்டாடப்பட்ட படங்கள்தான் ஜீவா, மற்றும் மெட்ராஸ். நடுவில் ‘அம்மா’ பிரச்சனை வந்து தியேட்டர்கள் மூடப்பட்டதால் இப்படங்களுக்கு பல கோடி வருமானம் போச்சு என்பது வேறு விஷயம். பட்…?

விமர்சன ரீதியாக எல்லேரையும் கவர்ந்த படங்கள் லிஸ்ட்டில் இரண்டுக்கும் இடம் உண்டு. இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதத்தில் பிரஸ்சை சந்தித்தார் மெட்ராஸ் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவர் மட்டுமல்ல, மெட்ராஸ் படத்தில் நடித்த அத்தனை பேரும். (ஹீரோயினுக்கு என்ன பிரச்சனையோ? ஆள் ஆப்சென்ட்) படத்தில் பைத்தியக்காரனாக நடித்திருக்கும் ஹரி (படத்தில் இவரது பெயர் ஜானி) மேடையில் ஏறியதும் நாமெல்லாம் நிருபர்கள் என்கிற ‘கெத்’தையும் மீறி ஹோவென சந்தோஷக் கூச்சலிட்டார்கள் நிருபர்கள். படத்துல நீங்க பேசுற டயலாக்கை ரெண்டு வரி பேசுங்க என்று கேட்கிற அளவுக்கு போனது நிலைமை. அவரும் அதை அப்படியே நடித்துக் காட்ட செம க்ளாப்ஸ்.

படத்தில் அன்பு கேரக்டரில் நடித்திருக்கும் கலையரசன், (தமிழ்சினிமாவின் அடுத்த முக்கியமான ஹீரோ?) கார்த்தி அண்ணே மட்டும் ஒத்துழைப்பு கொடுக்கலேன்னா என்னால அப்படி நடிச்சுருக்கவே முடியாது. ஒரு சீன்ல அவர் தோள்ல கை போட்டுட்டு பேசணும். எனக்கு ரொம்ப பயமா இருந்திச்சு. எப்படி நடிக்கப் போறோமோன்னுதான். ஆனால் ஸ்பாட்டுக்கு வந்து இறங்குனதும் கேஷுவலா என் தோள் மேல கைய போட்டு பேச ஆரம்பிச்சுட்டார். ஒரு நாள் கூட அவர் கேரவேன் கேட்கல. நாங்க எப்படி அந்த ஹவுசிங் போர்டுல சாதாரணமா நடமாடுனமோ, அப்படியேதான் அவரும் இருந்தார். அந்த எளிமைதான் எங்களை முதல் படத்திலேயே பேர் வாங்க வச்சுது என்றார்.

வட சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கானா பாலா கூட தான் பேசும்போது கார்த்தியைதான் அதிகம் புகழ்ந்தார். வேற ஹீரோன்னா காலை கீழே எடுத்துக் கூட வச்சுருக்க மாட்டாங்க. அப்படிப்பட்ட ஏரியாவுல கேரவேனே வேணாம்னு அந்த ஹவுசிங் போர்டுலேயே ஒரு வீட்டுல தங்கி நடிச்சுக் கொடுத்தார் கார்த்தி என்றார்.

படத்தில் மேரியாக நடித்திருக்கும் ரித்விகாவும் தன் பங்குக்கு பொய்யில்லாமல் பாராட்டினார் கார்த்தியை. நான் நடிச்சுட்டு இருப்பேன். அதை கவனிச்சுட்டு இருக்கிற கார்த்தி சார், நீ கலக்கு சித்தப்புன்னு கிண்டல் பண்ணுவாரு. ரொம்ப ஜோவியலா பழகுனார் என்றார் ரித்விகா.

இப்படி எல்லாரையும் கவர்ந்த படத்தின் ஹீரோ கார்த்தி, அவ்வளவு வெள்ளந்தியாக பேசியதுதான் இன்னொரு ஆச்சர்யம். ‘என் பிரண்டோட பையன் ஒருத்தன் எங்கிட்ட பேசினான். முதல்ல உங்க படம் பார்க்க போவணும்னு கூப்பிட்டப்போ, கார்த்தி படமா? நல்லாயிருக்காதேன்னு சொன்னேன். அப்புறம் எப்படியோ இந்த படத்தை பார்த்தேன். சூப்பர்னு சொன்னான். இது மாதிரி படங்களில் நான் தொடர்ந்து நடிக்கணும்னு ஆசைப்படுறேன் என்றார் கார்த்தி. கடந்த பல மாசமாகவே நான் மெட்ராஸ் படத்துல மூழ்கிட்டேன். அந்த சிந்தனை மாறணும்னுதான் பழையபடி முரட்டு மீசை கொம்பன் கெட்டப்புக்கு வந்தேன் என்றார்.

யெஸ்… மெட்ராஸ் படத்தோட பாதிப்பு மனசுலேர்ந்து மாறணும்னா அதற்குள் இன்னும் சில வருடங்கள் கூட ஆகலாம்!

carevangnavelrajakalaiyarasankarthikombanmadrasranjithSlide
Comments (0)
Add Comment