நல்லா ஓடுற படத்தை கில் பண்றாங்க! வருத்தத்தில் விதார்த்!

கடைசியில், வண்டிச் சக்கரத்தில் சிக்கிய வாழை மட்டை போல, நசுங்கி நொறுங்கிப் போவது படம் எடுக்க வந்த தயாரிப்பாளர்கள்தான். நடிகராக இருக்கும் வரை நல்ல வாழ்க்கை வாழ்ந்த விதார்த் எப்போது தயாரிப்பாளர் ஆனாரோ, அப்போ பிடிச்சது சனி. ‘குற்றமே தண்டனை’ படத்தை தயாரித்ததால் ஏற்பட்ட நஷ்டத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதை விவரித்தார் விதார்த். கொடுமை என்னவென்றால், சொந்தக் காரை விற்று கொஞ்சம் கடனை அடைத்தது வரை சொல்லி நா தழு தழுத்தார். அவர் தழுதழுத்த மேடை, குரங்கு பொம்மை சக்சஸ் மீட்.

மைனா படத்திற்கும் இப்படியொரு நிகழ்ச்சி நடக்கும்னு கற்பனை பண்ணினேன். பட்… நடக்கல. ஆனால் முதன் முறையா நான் ஒரு வெற்றி மேடையில் நிற்கிறேன் என்றார் விதார்த்.

மகள் பிறந்த அதிர்ஷ்டம்தான் இந்த வெற்றிக்கு காரணம்னு நம்புறேன் என்றவர், இந்த வெற்றியின் சந்தோஷத்தை நீடிக்க விட மாட்டேங்குறாங்களே என்று புலம்பியதில் ஒரு தவறும் இல்லை.

குரங்கு பொம்மை படம் நல்லா போயிட்டு இருக்கு. ஆரம்பத்தில் இந்தப்படம் பற்றிய செய்திகள் வெளியே பரவி ரசிகர்கள் தியேட்டருக்குள் வர சில நாட்கள் ஆகிவிட்டது. படம் பிக்கப் ஆகி ஓட ஆரம்பித்த நேரத்தில், திடீர்னு தியேட்டர்களின் எண்ணிக்கையை குறைக்கிறாங்க. சில தியேட்டர்களில் படத்தையே தூக்கிட்டாங்க. இந்த வாரம் வரப்போற புதுப்படங்களுக்காகதான் இந்த முடிவு எடுத்துருக்காங்க.

புதுப்புதுப் படங்கள் வரணும்தான். அதற்காக ஓடுற படத்தை தியேட்டர்ல இருந்து எடுக்கறது எந்த வகையில் நியாயம்? இதை யார்தான் தட்டிக் கேட்கிறது என்று குமுறினார் விதார்த்.

தமிழ்சினிமாவோட சட்ட திட்டங்களின் முதல் பாயின்ட்டே அடுத்தவன் முதுகை ரத்தம் கக்க வைக்கறதுதான்! அது புரியாமலிருக்காரே நம்ம விதார்த்?

https://www.youtube.com/watch?v=XuA2S5fzvQk

bharathirajaKurangu BommaiKutrame DhandanaiNithilanvidharth
Comments (0)
Add Comment