குறையொன்றுமில்லை- விமர்சனம்

தமிழ்சினிமாவில் வந்திருக்கும் முதல் கிரவுட் ஃபண்டிங் சினிமா! அப்படீன்னா? சுமார் 100 பேர் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு தயாரித்த படம்! (அந்த 100 பேரும் சொந்தபந்தங்களோட தியேட்டருக்கு வந்தாலே படம் ஹிட்டாச்சே!) அந்த நாலு பேருக்கு நன்றி என்பதை போல இந்த 100 பேருக்கு நன்றி என்று இயக்குனர் சொல்வதற்கு முன்னால் நல்ல சினிமா விரும்பிகள் நன்றி சொல்லிவிடலாம். ஏனென்றால் படத்தின் போக்கும், அது சொல்லும் விஷய அடக்கமும் கவுரவத்திற்குரியவை. வழக்கமாக ஆக்ஷனை கட்டி மாரடிக்கும் இயக்குனர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டியவையும் கூட!

கண்ணுக்கு எட்டிய வரைக்கும் பசுமை, அல்லது பொட்டல் வெளி. இங்கு வந்து பொருட்களை லாஞ்ச் பண்ணுங்க என்று ஒரு ஐடி இளைஞன் தனது மார்க்கெட்டிங் ஹெட்டுடன் விவாதம் செய்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? படத்தின் ஹீரோவும் அப்படி தனது கிராமத்தை நேசித்து, டவுனிலிருப்பவர்களை கிராமத்துக்கு வாங்க என்கிறார். அவரது கருத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்புகிறது அலுவலகத்தில். இதற்கிடையில் அந்த கிராமத்துக்கு வரும் அவன், தனது பாட்டி வீட்டில் தங்குகிறான். ஏற்கனவே காதல் தோல்வியில் இருக்கும் அவனை நேசிக்கிறாள் இன்னொருத்தி. அவள் ஒரு டாக்டர். கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கிராமத்திற்கு வருபவள். ஹீரோவின் சின்ன சின்ன புத்திசாலித்தனங்கள் அவளை கவர அந்த காதல் என்னாச்சு என்பது ஒருபுறம்.

கிராமங்களின் வளர்ச்சிதான் முக்கியம் என்று வலியுறுத்தும் ஹீரோ, அங்குள்ள ஓரளவுக்கு படித்த பெண்களை நர்ஸ் டிரையினிங் எடுக்க வைப்பதும், அந்த கிராமத்து இளைஞர்களுக்கு புதிதாக கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சொல்லிக் கொடுத்து தொழில் வளர்ச்சிக்கு கிராமத்தை தயார் படுத்துவதுமாக நகர்வது இன்னொரு புறம்.

கீதன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஏதோ ஐம்பது படங்களுக்கு மேல் நடித்த அசால்ட்தனம் அதில்! சில புதுமுகங்கள்தான் எடுத்த எடுப்பிலேயே மனசுக்கு பக்கத்தில் வருவார்கள். அந்த லிஸ்ட்டில் கீதனும், இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஹரிதாவும் வருகிறார்கள். அந்த ரயிலில் இருவரும் அறிமுகம் ஆகிக் கொள்கிற காட்சி, சுவாரஸ்யம். எப்போதுமே மிளகாய் கடித்த எபெக்ட்டிலேயே இருக்கும் ஹரிதா மெல்ல மெல்ல கீதனை நட்பு வட்டத்திற்குள் அனுமதிப்பது அழகோ அழகு.

ரயில் சினேகம் அதோடு விடுமா? ஹீரோவின் பாட்டிக்கே வைத்தியம் பார்க்கிறார் ஹரிதா. வாம்மா வீடு வரைக்கும் என்று இழுத்துக் கொண்டு வருகிறது பாட்டி. வந்த இடத்தில் மீண்டும் கீதனும் ஹரிதாவும் சந்திக்க, அட ரயில்ல பார்த்தோமே என்று இருவரும் சின்ன அதிர்ச்சி காட்ட வேண்டுமே? (டைரக்டர் கோட்டை விட்ட இடம் அது) ஆனால் சின்ன சின்ன குறைகளையெல்லாம் விரட்டியடிக்கிறது அறிமுக இயக்குனர் கார்த்திக் ரவி சொல்ல வந்திருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவான மெசேஜ்.

எதிர்கால தமிழ்சினிமாவுக்கு நல்ல அறிமுகம் கீதனும், ஹரிதாவும் என்றால் படத்தில் வரும் நண்பன் கேரக்டரில் வாழ்ந்திருக்கும் ஹிட்லருக்கும் பாராட்டுகள்.

படம் சில நேரங்களில் சீரியல் எபெஃப்ட்டில் நகர்வதை தவிர்த்திருக்கலாம். முக்கியமாக பாடல்களால் ஏற்படும் அசதி, அந்த பாடல்களை எழுதியவரின் ஜுனுன் தமிழில் ஓடியே போய்விடுகிறது. இவங்களுக்கெல்லாம் வாய்ப்பு தர்றாங்களே என்று நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

எப்படியிருந்தாலும், ‘நாளைய பாரதமே வா… ’ என்று டைரக்டர் கார்த்திக்ரவியை விருதுகள் அழைக்கக்கூடும். இந்த கிரவுட் ஃபண்டிங் படத்திற்கு தியேட்டர் கொள்ளாத கிரவுட் வந்தாலும் நல்லதுதான். ஏனென்றால் இப்போது விட்டால் வேறு எப்போதுதான் தமிழ்சினிமா ரசிகர்கள் முழு மெசேஜ் படங்களுக்கு வரவேற்பு தருவார்களாம்?

-ஆர்.எஸ்.அந்தணன்

crowd fundinggeethanharithakarthik ravikurai ondrum illai- reviewSlide
Comments (0)
Add Comment