விக்ரம் 15 நயன்தாரா 2,5 ஹாரிஸ் 3 ஆரம்பமே பற்றாக்குறை விளங்குமாய்யா சினிமாத்துறை?

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் இதுவரைக்கும் இரண்டு தயாரிப்பாளர்களிடம் கைமாறி கைமாறி கடைசியில் வந்து புலி தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் ஆபிசில் லேண்ட் ஆகியிருக்கிறது. புலி விஷயத்திலேயே மேலேயிருக்கும் கோடெல்லாம் ஏடாகோடாகி நிற்கும் அந்த தயாரிப்பாளர் அடுத்த படத்திற்காக கூட்டாஞ்சோறு ஆக்கி முடிப்பதற்குள் உலை வைத்த பானையில் விரிசலே விழுந்து விடும் போலிருக்கிறது. ஏனாம்?

ஒரு படத்திற்கு பட்ஜெட் போடப்படும் போதே அந்த படத்தின் வியாபார கணக்கையும் எழுதி, இரண்டையும் டேலி செய்வார்கள். அதில் முன்ன பின்ன… அல்லது ஏறக்குறைய வந்தால் மட்டுமே அந்த படத்தை ஆரம்பிப்பார்கள். மலைக்கும் மடுவுக்கும் இருக்கிற வித்தியாசம் வந்தால் “நல்லது தம்பிங்களா? வந்ததுக்கு நாலு வாய் இட்லிய தின்னுட்டு இடத்தை காலி பண்ணுங்க” என்று ஆபிசை பூட்டிவிட்டு கிளம்பிவிடுவார்கள். இந்த பார்முலா இந்த புதிய படத்தில் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

எப்படி?

மேற்படி படத்தில் பங்காற்றும் இவர்களது சம்பளக் கணக்குதான்.

விக்ரமுக்கு 15 கோடி. நயன்தாராவுக்கு 2.5 கோடி. 4 கோடி வாங்கிக்கொண்டிருந்த ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்காக 3 கோடிக்கு இறங்கியிருக்கிறாராம். அதற்கப்புறம் ஷுட்டிங் செலவுகள், டைரக்டர் சம்பளம், இதர நடிகர் நடிகைகள், கேமிராமேன், எடிட்டர் சம்பளம், விளம்பரச் செலவு என்று கணக்கு போட்டால், விக்ரமிற்கு தற்போது இருக்கும் பிசினசுக்கும் இதற்கும் துண்டு விழுந்தால் கூட பரவாயில்லை. தூணே விழும் போலிருக்கிறது!

இவ்வளவும் பண்ணிவிட்டு ரிலீஸ் பண்ணப் போனால், அந்த நேரத்தில் புலியால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் சும்மாயிருப்பார்களா? அதற்கும் கொஞ்சம் எண்ணி வைக்க வேண்டுமே? தமீன்ஸ் என்ன செய்யப் போகிறார்?

மலையை கட்டி மசால் வடையை இழுப்பாரோ என்னவோ?

AnandShankarHaarisJyarajnayantharaOver BudgetSlidevikram
Comments (0)
Add Comment