‘ வேணாம்னு சொல்லணுமே, எப்படி? ’ அஞ்சிய லிங்குசாமியை அசத்திய டைரக்டர்!

‘திருப்பதி’ பிரதர்ஸ் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ? ரசிகர்களின் காணிக்கைகள் முழுக்க அவர்கள் உண்டியலில்தான்! கோலிசோடா, மஞ்சப்பை என்ற இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது கல்லாபெட்டிக்கும் பெயர் வைத்துவிட்டார்கள். இதன் பெயர் ‘சதுரங்க வேட்டை’! வினோத் என்ற புதுமுகம் இயக்க, நட்டியும் இஷாராவும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். சினிமாவை பிலிம் இல்லாமல் கூட எடுத்துவிடலாம், மனோ பாலா இல்லாமல் எடுக்கவே முடியாது என்று மேடைக்கு மேடை இடிக்கப்படும் மனோபாலாதான் இப்படத்தின் தயாரிப்பாளர். படம் நன்றாக இருந்ததால், திருப்பதி தத்தெடுத்துக் கொண்டது.

இது படத்தை வாங்கி வெளியிடும் லிங்குசாமியின் ஸ்டேட்மென்ட்-

பல நாட்களாகவே ‘அஞ்சான்’ ஷுட்டிங்கிலிருந்த என்னை தொந்தரவு பண்ணிகிட்டு இருந்தார் மனோபாலா சார். மும்பையிலேயே படத்தை பார்க்க ஏற்பாடும் செஞ்சார். ஆனால் ஷுட்டிங் டயர்ட். நான் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தேன். அது மட்டுமில்ல.. படத்தை பார்த்துட்டு வேணாம்னு சொல்றதுக்கு ஒரு பதிலையும் தேடிக்கிட்டு இருந்தேன். நம்ம கம்பெனி இப்போ அஞ்சு படம் பண்ணிகிட்டு இருக்கு. ஒரு பக்கம் கமல் சார் படம். இன்னொரு பக்கம் சூர்யா சார் படம். இந்த நேரத்துல இதை ரிலீஸ் பண்ணறது கொஞ்சம் சிரமம்னு சொல்லிடலாம்னு நினைச்சேன். இருந்தாலும், இந்த படத்தை பார்த்துட்டுதானே சொல்லணும்.

ஒருவழியா ஒரு நாள் ஷுட்டிங் முடிஞ்சு வந்ததும், நானும் டயலாக் ரைட்டர் பிருந்தா சாரதியும், இன்னொரு நண்பருமா படம் பார்க்க உட்கார்ந்தோம். கொஞ்சம் டயர்ட்டா இருந்ததால் அப்படியே சாஞ்சுட்டேன். பத்து நிமிஷம் போயிருக்கும். பக்கத்துல இருந்த பிருந்தா சாரதியை பார்த்தா, அவ்வளவு ஆர்வமா பார்த்துட்டு இருக்கார். நான் அவரிடம், நாளைக்கு பார்த்துக்கலாமா? படம் ஒரு வேளை நல்லாயிருந்து என் டயர்ட் காரணமா நல்லாயில்லன்னு தப்பா முடிவெடுத்துட கூடாதேன்னு சொன்னேன். நீ வேணும்னா கிளம்பு. நான் பார்த்துட்டு உனக்கு சொல்றேன்னாரு பிருந்தா. அவரே அப்படி சொன்னப்புறம் நான் கிளம்புறதான்னு உட்கார்ந்துட்டேன். அஞ்சு நிமிஷம் கூட போயிருக்காது. என்னோட களைப்பெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. அப்படியே பரபரன்னு கதை என்னை இழுத்துட்டு போக ஆரம்பிச்சுடுச்சு. மனோபாலா சாருக்கு போன் பண்ணி உடனே யெஸ் சொல்லிட்டேன் என்றார் லிங்கு.

படத்தின் ஹீரோயின் இஷாரா கோவையில் படித்தவராம். தமிழ் சரளமா பேசுவார் என்றார்கள். அவரே படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார். ‘அந்த குரலே படத்துக்கு பெரிய ப்ளஸ்சா இருக்கு’ என்றார் லிங்குசாமி. இந்த பாராட்டுகளை கேட்டு இஷாராவின் முகம் எலக்ட்ரிக் பல்பை போல பிரகாசமாக எரிய ஆரம்பிக்க, மற்றுமொரு வெற்றிப்படம் என்று அறிவிக்காத குறையாக கலைந்தது சதுரங்க வேட்டை குழு!

anjan shooting spotdistributiongoli sodailavarasuisharalingusamymanjapaimano balanattisathuranga vettaiSlidethirupathy brothers
Comments (0)
Add Comment