இது நம்ம இடம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல். அவரது புதுப்படமான ‘சபாஷ் நாயுடு’ படத்துவக்க விழாவை நடிகர் சங்க வளாகத்திற்குள் நடத்தியதுடன், அங்கு நடத்துவதற்காக இரண்டரை லட்சம் வாடகையும் செலுத்தியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம் கமலுக்கு நன்றி தெரிவித்திருக்கிறது. இதே விழாவில் அதைவிட பெரிய நன்றி ஒன்றையும் சங்கம் செலவிட்டாக வேண்டும். அது?
லைக்கா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் தனது சார்பாக நடிகர் சங்க கட்டிட நிதியாக ஒரு கோடி ரூபாயை இன்று வழங்கினார். ஒரே லட்சியத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கும் நடிகர் சங்க பொறுப்பாளர்கள் அத்தனை பேருக்கும் இதில் பெருத்த சந்தோஷம். சுபாஷ்கரன் மனப்பூர்வமாக இந்த பணத்தை அள்ளிக் கொடுத்தாலும் பின்னணியில் ரஜினியின் வேண்டுகோளும் அதில் இருப்பதாகவே நினைக்க வைக்கிறது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் சங்க வளாகத்திலிருந்து சுபாஷ்கரன் தனது உதவியாளர்கள் புடைசூழ சென்றது ரஜினி வீட்டுக்குதான். போயஸ் கார்டனுக்கு அவர் போய் சேர, அதற்கு முன்பே அவரது வருகையை எதிர்நோக்கி விரிய திறந்து வைக்கப்பட்டிருந்தன ரஜினி வீட்டுக் கதவுகள். உள்ளே சென்றவர்கள், சுமார் அரை நேரத்திற்கு பின் மலர்ந்த முகத்தோடு வெளியே வந்தார்கள்.
நடிகர் சங்கத்தில் நடந்த இந்த சபாஷ் நாயுடு படத்துவக்க விழாவில் கமல் காலில் விழுந்து ஆசி பெற்ற விஷால், விரைவில் ரஜினி காலிலும் விழுந்து ஆசி பெறுவார். ஏனென்றால் அவர்கள் விஷாலையும் நாசரையும் மதித்ததால் ஏற்பட்ட இனிய விளைவுதானே இந்த ஒரு கோடி!