எந்த படத்திற்காக தனது உழைப்பை கொட்டுகிறாரோ, கிட்டதட்ட வெளியுலக தொடர்பையே அறுத்துக் கொள்வார் மோகன்ராஜா. அந்த படத்தை துவங்கி முடிகிற வரைக்கும் தனது செல்போனைக் கூட தொட மாட்டார். ‘என் குழந்தைகளோடு சந்தோஷமாக விளையாடி முழுசா ரெண்டு வருஷம் ஆச்சு’ என்கிறார். வேலைக்காரன் படத்திற்காக அவர் உழைத்த இந்த இரண்டு வருடங்களில், நாட்டில் என்னென்னவோ நடந்துவிட்டது. ஆனால் அவரது முழு கவனமும் படத்தை தாண்டி வெளியே வரவேயில்லை.
‘இந்தக் கதையை நான் முதல் படத்திலேயோ, இரண்டாவது படத்திலேயோ எடுத்திருந்தால் யாரும் சட்டை பண்ணியிருக்க மாட்டார்கள். இப்படியொரு அழுத்தமான மெசேஜ் படங்களை சொல்ல எனக்கு இத்தனை வருட அனுபவம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த கதைக்காகதான் நான் என்னை தயார் படுத்திகிட்டு இருந்தேன்னு கூட சொல்லலாம்’ என்கிறார் வேலைக்காரன் குறித்து.
அப்படியிருந்தும் படப்பிடிப்புக்கு நடுவில் மோகன் ராஜா பார்த்த ஒரே படம் அறம் மட்டும்தான். நான் பார்க்கலைன்னா நயன்தாரா கோவிச்சுப்பாங்க. அதனால்தான் பார்த்தேன். அற்புதமான படம். நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாக தான் இருக்கும், அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார் என்றார் மோகன் ராஜா.
கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்கு பிறகு அது நடக்கும். சினிமாவை விட இப்போது அரசியல்தான் படு சுவாரஸ்யமான என்டர்டெயின்மென்ட்டா இருக்கு. முக்கியமா டி.வி. வேலைக்காரன் படத்தில் இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார்.
எதிர்பார்ப்போட காத்திருக்கோம் ஜி!