என் அடுத்த படத்திலும் புன்னகைப்பூ கீதாதான் ஹீரோயின்!

நாகேந்திரன் யார் என்பது இன்டஸ்ரிக்கு தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு தெரியாது. புன்னகைப்பூ கீதா யார் என்பது பொதுமக்களுக்கு தெரியும். ஆனால் அவர்களுக்கு தெரிந்தளவுக்கு இன்டஸ்ட்ரிக்கு தெரியாது. இரண்டுக்குமான விடையாக இருந்தது காவல் படத்தின் பிரஸ்மீட்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியா புன்னகைப்பூ கீதா நடிக்கிறாங்கன்னு சொன்னவுடன் பல பேரு பல மாதிரி சொன்னாங்க. ஆனால் நான் அவங்கதான் நடிக்கணும்னு உறுதியா இருந்தேன். இந்த படத்தில் நிறைய ஆக்ஷன் சீக்வென்ஸ். அதிலெல்லாம் அவங்க டூப் இல்லாம நடிச்சிருக்காங்க. இத்தனைக்கும் ஷுட்டிங் ஸ்பாட்ல அவங்களுக்காக ஒரு டூப்பை ரெடி பண்ணி வச்சுருந்தோம். இருந்தாலும், எல்லா ஆக்ஷன் காட்சிகளிலும் நான்தான் நடிப்பேன்னு உறுதியா இருந்தாங்க. அவங்களுக்கு நிறைய அடி என்றார் நாகேந்திரன். அடுத்த படத்திலும் அவங்கதான் ஹீரோயின் என்று அவர் கொடுத்த உத்தரவாதம்தான் புன்னகைப்பூ கீதாவின் கான்டாக்ட் சர்டிபிகேட்.

சரி… நாகேந்திரன் யாரென்று புரிய வைத்த சீன் என்ன? சமுத்திரக்கனியும் இவரும் வாடா போடா பிரண்ட்ஸ். இந்த படத்தில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்துவிட வேண்டும் என்று முயலும் போதெல்லாம், நீ டைரக்டரா? போடா போய் வேலையை பாரு என்று கூறிக் கொண்டேயிருந்தாராம் அவர்.

அப்புறம்தான் தனது கதையில் ஒன் லைனை வற்புறுத்தி சொல்லியிருக்கிறார் நாகேந்திரன். கேட்ட மாத்திரத்தில், நான்தான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றாராம் அவர். கூலிப்படையினரை பற்றிய படம்தான் காவல். இப்படியொரு கதையை ஏன் எடுத்தார் நாகேந்திரன்.

கல்லூரியில் படிக்கும் போது பிஎச்டி ஆராய்ச்சிக்காக அவர் எடுத்த சப்ஜெக்ட்தான் இந்த கூலிப்படை. அதற்காக நிஜமாகவே நிறைய கூலிப்படைகளை பார்த்து பேட்டிகளை எடுத்திருக்கிறாராம்.

அப்ப படமே நிஜத்திற்கு பக்கத்துல இருக்கும்னு சொல்லுங்க…

kaavalnagendranpunnagaipoo geethasamuthirakkaniSlide
Comments (0)
Add Comment