எரிச்சலூட்டிய மிஷ்கின்! கடுப்பான கே.எஸ்.ரவிகுமார்!

நல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்டுறதை விட துபாய்க்கு வண்டி ஒட்றதா முக்கியம்’ என்று வயலிலேயே வண்டியை இறக்கி பிளைட் கம்பெனி தலையில் துண்டு போட்டு மூடியிருப்பார்.

எங்கு மைக் கிடைத்தாலும் உணர்ச்சி ததும்ப பேசுகிறேன் பேர்வழி என்று அவர் செய்யும் காமெடிக்கு தோதாக நேற்றும் ஒரு மேடை சிக்கியது. ‘பேரன்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. படத்தின் நாயகன் மம்முட்டியும் வந்திருந்தார். இயக்குனர் ராம் குறித்து மிஷ்கின் பேசியதுதான் ஒரே ஐயோ குய்யோ!

ராம் மாதிரி ஒரு டைரக்டர் இல்லவே இல்ல. இப்பல்லாம் என்ன டேஷுக்கு படம் எடுக்குறானுங்களோ என்கிற ரீதியில் அடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அப்படியே படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் பக்கம் திரும்பியவர், “தேனப்பன் சார். இதுக்கு முன்னாடி நீங்க எத்தனையோ படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் படமே இல்ல. எல்லாம் இருட்டறையில் முரட்டுக்குத்துக்கு சமம். ஆனா இதுதான் படம்” என்று கூற… இதே மேடையில் இருந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு எப்படியிருக்கும்? இன்னும் சொல்லப் போனால், கே.எஸ்.ரவிகுமாரே ஒரு நிதானமான மிஷ்கின்தான்!

“நான் மிஷ்கினுக்கு ஒரு தகவல் சொல்லிக்கிறேன். தேனப்பன் தயாரிப்பில் ‘பஞ்ச தந்திரம்’ என்று ஒரு படம் இயக்கினேன். இன்னமும் பல வீடுகள்ல அந்த படத்தின் டி.வி.டி இருக்கு. அதனால் பொத்தாம் பொதுவா பேசக் கூடாது” என்றார். இப்படி நேரடி குட்டு வாங்கிய மிஷ்கின், தன் முகத்தை வழக்கம் போல கூலிங் கிளாசுக்கு பின்னால் மறைத்துக் கொண்டது தனி கதை.

போகட்டும்…பேரன்பு எப்படி? ஒரு மாற்றுத்திறனாளியை மகளாக பெற்ற அப்பனின் கதையாக இருக்கும் போல தெரிகிறது. மன உணர்வுகளுக்குள் புகுந்து சிந்திப்பதில் ராம் கிரேட். பேரன்பு வெளிவரும்போது, மக்களின் பேரன்பை அள்ளும் என்பதில் துளி டவுட் இருக்கப் போவதில்லை.

Bharathi Rajadirector ramks ravikumarMamootymysskinPeranbu Audio LaunchPl Thenappanvetrimaran
Comments (0)
Add Comment