அறிமுக இயக்குனர்களுக்கெல்லாம் அண்ணா பல்கலைக்கழகமாக இருப்பார் போலிருக்கிறது கார்த்திக் நரேன். ‘துருவங்கள் பதினாறு’ மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் ஆன இந்த இளம் இயக்குனர், திட்டமிட்டபடி படம் எடுப்பதில் வல்லவர் என்கிற பெயரை முதல் இரு படங்களிலேயே தட்டிக் கொண்டு போய்விட்டார். (அப்படியே தொடரணும். முதல்ல முயல். போக போக ஊரையே அடிச்சு சாய்க்குற புயல்னு இருக்கக் கூடாது. அதுவே நம் அட்வைஸ்)
அதென்ன திட்டமிட்டபடி? படத்தில் சிறு கேரக்டரில் நடித்த தாடி வெங்கட் சொன்னார். “பதினைந்து நாளுக்கு முன்னாடி ஒரு ஷாட் எடுத்தார். அடுத்த பதினைந்து நாட்களுக்கு நடுவில் எத்தனையோ காட்சிகள் எடுத்துவிட்டார். மீண்டும் நான் நடிக்கும் அந்த காட்சி எடுக்க வேண்டியிருந்தது. 15 நாட்களுக்கு முன் எப்படி லைட்டிங் வைக்கப்பட்டதோ, அதே லைட்டிங். அதே செட்டப். மில்லி மீட்டர் கூட அதில் மாற்றமில்லை. எப்படி தெரியுமா? அவ்வளவும் பேப்பர் வொர்க். அதில் இருப்பதைதான் எடுப்பார். எடுப்பதுதான் அதில் இருக்கும். அப்படியொரு துல்லியம். திட்டமிட்டதை தாண்டி ஒரு நாள் கூட எக்ஸ்ட்ரா ஷுட்டிங் இல்லை” என்றார்.
இப்படி ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரியையும் வியக்க வைக்கும் கார்த்திக் நரேன் எப்படி கவுதம் மேனனிடம் சிக்கினார் என்பதே பெரும் கேள்வி. போகட்டும்… முதலை வாயிலிருந்து முழுசாக வெளியே வந்துவிட்டார் கார்த்திக். இருந்தாலும் கவுதம் மேனன் குறித்த பஞ்சாயத்துகள் கவுன்சிலில் நடந்து வருகிறதாம். இந்த தகவலை அவரே சொன்னார். திட்டமிட்டபடி படம் ஆகஸ்ட் 31 ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இரண்டாவது பாலையும் ஓங்கி அடிப்பார் கார்த்திக் நரேன்! ஏனென்றால் இந்த சினிமாக்காரர்கள் இன்னும் அவரை கெடுத்துவைக்கவில்லை