நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி? சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால் என்னாகும்? அதற்கு அடுத்தடுத்த படங்கள் எல்லாம் அவருக்கு அப்படிப்பட்ட ஹீரோக்களாகவே அமைவார்கள் என்பதை நிரூபித்தது தமிழ்சினிமா. ‘விசயகுமாரண்ணே ப்ப்ப்ப்பிரியாத்தான் இருக்காக… சோடி போடுறியளா?’ என்ற ரேஞ்சிலேயே அழைப்புகள் வந்தன. இதனால் சித்தன் போக்கு சீதை போக்கு என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டார் நயன்தாராவும்.
அந்த நேரத்தில்தான் சிம்பு தனது வல்லவன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். இந்த பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் நாலைஞ்சு வயசு வித்தியாசம் இருக்குமேப்பா… என்று வியந்தது ஊர். அந்த வியப்பில் மேலும் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை போட்டார் சிம்பு. எப்படி? நயன்தாரா உதட்டை சிம்பு கவ்வி இழுப்பதை போல ஒரு போஸ்டர். தமிழகெமெங்கும் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர், சமுதாயத்தில் பெரும் எதிர்ப்பலையை கிளப்பியது. ஒரே நாளில் உச்ச நடிகை ஆனார் நயன்தாரா. அப்புறமென்ன? அவரை மொய்த்துக் கொண்டது இளைஞர்கள் கூட்டம். அன்று துவங்கிய மன்மத ஊர்வலம், கல்வீச்சு கலவரத்துடன் இன்றும் தொடர்கிறது நயன்தாரா வாழ்வில்.
இப்போதென்ன விசேஷம்? தெலுங்கிலும் சிம்புவை போல ஒரு சின்னப்பையனை ரெடி பண்ணிவிட்டார் நயன்தாரா. பாலகிருஷ்ணா மாதிரியான வயசாளிகளுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, அங்கிருக்கும் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டுவிட்டார். இனிமேலும் இதே ரேஞ்சில் போனால் நம்ம புகழ் என்னாவது என்று நினைத்தாரோ என்னவோ? தன்னை விட சுமார் எட்டு வயது இளையவரான ஒரு புது ஹீரோவுடன் ஜோடி சேர தயாராகிவிட்டார்.
அந்த இளம் ஹீரோ, நடிகர் சாய்குமாரின் மகன்! அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே தெலுங்கு ஏரியா திடுதிடுங்குதாம்! ம்… நயன்தாரா நினைத்ததும் அதைத்தானே!