நடிக்க வந்தார் மாமா மகன்! மனசார வாழ்த்தினார் உதயநிதி

உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் ஒரு தலைவருக்குரிய அந்தஸ்த்தோடு கொண்டாடப்பட்டதில் வியப்பேதுமில்லை. திரும்புகிற இடங்களில் எல்லாம் அவரது அழகழகான புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்கள். ‘ஹாட்ரிக் அடிக்க வாழ்த்தும் நெஞ்சங்கள்’ என்று ரசிகர்களின் புகைப்படங்களுடன் அமர்க்களப்பட்டது சென்னை. அதே நாளில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு. நம்மை அழைத்தவர் உதயநிதியின் தாய் மாமா மகன் ரக்ஷன். சற்றே கூச்ச சுபாவம் உடையவர் போல தோன்றினாலும், ஆள் என்னவோ அழகுதான்! கம்ப்யூட்டர் பொறியியல் நான்காமாண்டு படித்து வருகிறார். படிப்பு முடிவதற்குள் நடிப்பையும் சுமக்க வைத்திருக்கிறார்கள் அவரை.

‘திருட்டு ரயில்’ என்ற படத்தில் அறிமுகமாகிறார் ரக்ஷன். அவருக்கு ஜோடியாக கேத்தி என்ற புதுமுகம் நடிக்கிறார். உங்க வருகையை எப்படி எடுத்துகிட்டார் உதயநிதி? என்று ரக்ஷனிடம் கேட்டால், ஏகப்பட்ட யோசனைக்கு பிறகு சொன்னார். ‘அவரு என்னை வாழ்த்தினார். நல்லா நடிக்கணும்னு அட்வைஸ் பண்ணினார்’ என்று.

ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டுரயில் ஏறிச்செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரும் பிரச்சனை அவர்களுக்கு காத்திருந்தது. அதிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா..? இல்லையா…? என்பதுதான் திருட்டு ரயிலின் கதை.

ஏற்கனவே ‘முத்து நகரம்’ என்ற படத்தை இயக்கிய திருப்பதி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

கலைஞர் குடும்பத்திலிருந்து ஒருவர் நடிக்க வந்தால், விமர்சனங்கள் கூர் தீட்டிக் கொண்டு காத்திருக்குமே? அதற்காகவே சுமார் ஆறு மாதங்கள் ரக்ஷனை கூத்துப்பட்டறைக்கு அனுப்பி நடிப்பை கற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள். சென்ட்ராயன், மயில்சாமி போன்ற அனுபவ நடிகர்கள் ரக்ஷனுடன் இணைந்து நடிக்கப் போகிறார்கள். எல்லாருமா சேர்ந்து கை துக்கிவிட்ருங்வாங்க. கவலை எதுக்கு?

rakshanSlidethiruttu rayludhanithi stalin
Comments (0)
Add Comment