முதல்வன் பட அர்ஜுன் ஆனார் பன்னீர் செல்வம்! படீர் திடீர் நடவடிக்கைகளால் சசிகலா கலக்கம்!

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராகி அர்ஜூன் எடுத்த நடவடிக்கைகள் எப்பவாவது நிஜம் ஆகிவிடாதா என்கிற ஏக்கம் படம் பார்த்த அத்தனை பேருக்கும் இருக்கும். இப்போதும் அந்த படத்தை பார்க்கும் மக்கள் ஒரு பெருமூச்சோடு அமைதியாகிவிடுவதை பார்க்கலாம். ஆனால் அதே போலொரு அதிரடி முதல்வர் ஆகிவிடுவார் போலிருக்கிறது ஓ. பன்னீர்செல்வம். சசிகலாவின் தலைமையை எந்த நேரத்தில் எதிர்த்தாரோ? அந்த நேரத்திலிருந்தே அவரது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் படீர் திடீர் வேகத்தில் அமைந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

பதவியில் இருக்கப் போவது இன்னும் நாலு நாளோ, ஐந்து நாளோ? அதற்குள் ஒரு கை பார்த்துவிடலாம் என்று நினைத்தாரோ… அல்லது இந்த பதவியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாரோ… அது அவரது மனசாட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அமர்ந்து தியானம் செய்ததே அர்ஜுன் செய்த மாதிரி அதிரடியான புரட்சிதான். அதற்கப்புறம் சும்மாயிருந்தாரா? கட்சியின் பொருளாளர் என்ற முறையில் அதிமுக வின் வங்கி கணக்கில் வேறு யாரும் கை வைக்க முடியாதபடிக்கு கடிதம் கொடுத்துவிட்டார். வங்கிகள் இதை மீற முடியாது.

அவரது அடுத்த அதிரடி இதுதான். முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகனின் சஸ்பென்ட் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது. இன்னும் என்னென்ன செய்வாரோ என்று தலைமை செயலகமும், சசிகலா வட்டாரமும் குழம்பிப் போயிருக்கிற நிலையில், காவல் துறை டி.ஜி.பியையும் தலைமை செயலாளரையும் சந்தித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார். இதையடுத்து பொதுமக்களும் தங்கள் ஆசையை சோஷியல் மீடியா மூலம் பன்னீருக்கு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

“இன்றே எல்லா டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்” என்று அறிவிக்கச் சொல்லி வருகிறார்கள். பன்னீர் போகிற வேகத்தை பார்த்தால் அதையும் செய்துவிட்டால், அப்புறம் மன்சூரலிகான் சொன்னதை போல அவர் ஓ பன்னீர்செல்வமல்ல. ஒரிஜனல் பன்னீர் செல்வம்!

https://youtu.be/VsmnUiECI64

admkchef Secretary gnadesikanmudhalvan tamil filmo panneer selvamopssasikalsupport opssupport sasikaltamil nadu politicstamilnadu cmtamilnadu Governor
Comments (0)
Add Comment