பண்டிகை -விமர்சனம்

‘தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்… இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க?’ என்று திடுக்கிட வைக்கும் பண்டிகை ஒன்று இருக்கிறது படத்தில். கொஞ்சூண்டு லவ். மற்ற நேரமெல்லாம் இந்த பண்டிகையை சுற்றிதான் படம் நகர்கிறது. திம்மு திம்மு என்று ஒலிக்கும் குத்துகள், சென்னைக்குள் நடக்கும் இந்த இருட்டுப்பகுதியின் இம்சையை அப்படியே உரித்துக் காட்டுகிறது. ‘எங்கேந்துய்யா புடிக்கிறாய்ங்க இப்படியெல்லாம்?’ என்கிற யோசனையும் ஒட்டிக் கொள்கிறது கூடவே. (ஹ்ம்… இருக்கும். இருக்கும்…. நமக்கு தெரியாத சென்னையில் இன்னும் என்னென்ன இருக்கோ?)

சொந்தமிருந்தும் அநாதையாக திரியும் கிருஷ்ணா ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். ஒரு செல்போன் வாங்கக் கூட காசில்லாதளவுக்கு கஷ்டம்! சூதாட்டத்தில் தன் வீடு, தொழில் செய்யும் இடம் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கட்டிய மனைவியும் கோபித்துக் கொண்டு போன நிலையிலிருக்கிறார் பருத்திவீரன் சரவணன். இவ்விருவருக்கும் தேவை பணம். அதை சூதாட்டத்தில் ‘அமுக்கலாம்’ என்று கிளம்பும் அவர்களும், நண்பர்களும் படுகிற அவஸ்தைதான் ‘பண்டிகை’! (ஆங்… பண்டிகை என்றால், நாமெல்லாம் டி.வியில் பார்ப்போமே, ரெஸ்ட்லிங். அதுதான். அதை மினிமம் பட்ஜெட்டில் போட்டு புரட்டினால் இந்த ‘பண்டிகை’. அதாவது முரட்டுக்குத்து)

ஓவர் ஆக்ட்டிங் புகழ் கிருஷ்ணாவை இந்தப்படத்தில் அடக்கி ஒடுக்கி நடிக்க வைத்த ஒரே காரணத்திற்காகவே வலிக்குமளவுக்கு கைதட்டலாம் அறிமுக இயக்குனர் பெரோசுக்கு. தன் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார் கிருஷ்ணா. படத்தில் முக்கால்வாசி நேரம் பைட்தான். உடம்பு பஞ்சராகிற அளவுக்கு உழைத்திருக்கிற கிருஷ்ணாவுக்கு இப்படம் பெயரையும் புகழையும் வாங்கித் தரும். சந்தேகமில்லை. இவருக்கும் ஆனந்திக்குமான லவ் ஆரம்பமாகும் இடமும், அதை தொடரும் காட்சிகளும் புதுசு. அதனாலேயே நிறைய ரசிக்க முடிகிறது. (மிஸ்டர் கிருஷ்ணா, நடிப்பில் இந்த அளவை தாண்டாமல் நடிக்க கற்றுக் கொண்டால் பின்வரும் காலங்கள் உங்களுக்கானதாக அமையும்)

ஆனந்திக்கு படத்தில் அவ்வளவு வேலையில்லை. கொடுத்த கொஞ்ச நேரத்தில் தனது மென்சிரிப்பால் கவர்ந்து, புன்சிரிப்பால் புதைத்துவிட்டு போகிறார் நம்மை. ஒரு சீனில் இவர் தேவையில்லாமல் என்ட்ரி கொடுத்து, கொள்ளையடிக்கப் போகும் கோஷ்டியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். ஆனால் அந்த செல்ஃபியால் ஒரு திருப்பமும் இல்லை படத்தில்!

பருத்தி வீரன் சரவணன் ஒவ்வொரு முறை ஏமாந்து போய் கண்கலங்கும்போதும் மனுஷன் தப்பிச்சுடக் கூடாதா என்று தோன்றுகிறது. இந்த பரிதாபம்தான் அந்த கேரக்டரின் மீதிருக்கும் அழுத்தம். அதை மிக சரியாக பிரதிபலிக்கிறது திரைக்கதை.

சூதாட்டப்பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளை அடிக்கக் கிளம்பும் கிருஷ்ணா அண் கோஷ்டி அந்த பங்களாவுக்குள் நுழைந்ததிலிருந்து வெளியே வருகிற வரைக்கும் நமது நெஞ்சுக்குள் இசிஜி எமெர்ஜென்சி சவுண்ட் கேட்க ஆரம்பித்துவிடுகிறது. என்னவொரு படபடப்பு? அதிலும் அந்த இரட்டையர்களின் பைட்டிங் ஸ்டைலும், கத்தியும் செம ஷார்ப். யாருப்பா நீங்க?

கருணாஸ், பிளாக் பாண்டி, மதுசூதனன், அருள்தாஸ் என்று படத்தில் வருகிற அத்தனை பேரும் கனக்கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். முன்னாள் ஹீரோ நிதின் சத்யாவுக்கும் இதில் ஒரு டிபரண்ட் ரோல்.

ஆர்.எச்.விக்ரம் இசையில் பின்னணி இசை அமோகம். ஆனால் படத்தின் வேகத்திற்கு பிரேக் போடுகிற மாதிரி பாடல்களை நுழைத்த எடிட்டர்தான் இசையமைப்பாளருக்கு வில்லன்.

எவ்வளவு கொள்ளையடிச்சாலும், நிம்மதிதான் முக்கியம் என்று முடிவெடுக்க விட்டதற்காகவே அறிமுக இயக்குனர் பெரோசை பாராட்டலாம்.

மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Auraa cinemasFerozGambling in chennaiKayal Anandhikrishnanithin satyapandigai-reviewPzndigai ReviewStreet Fightvijayalashmi
Comments (0)
Add Comment