பெரியாரிசம் டூ பெருமாளிசம்! விவேக்கின் ‘ஆத்திக’ அதிரடி!

இப்படி நகைச்சுவை நடிகர்கள் எல்லாரும் ஹீரோவாகிட்டீங்கன்னா, அப்ப காமெடிக்கு நாங்க யாரை தேடுறது? இப்படியொரு கேள்வியை விவேக்கை பார்த்து கேட்க வேண்டிய நேரம் இதுதான். யெஸ்… அவரும் ஹீரோவாகிவிட்டார். ‘நான்தான் பாலா’ படத்தில் ஹீரோவாக நடிக்க அவரை அழைத்தபோது, முதலில் தயங்கினாலும் இரண்டு வருஷம் விடாப்பிடியாக போராடி எப்படியோ நடிக்க வைத்துவிட்டார் டைரக்டர் ஆர்.கண்ணன்.

துளசி தீர்த்தமா? கூலிப்படை ரத்தமா? யாருக்கு வெற்றி என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ் என்கிற விவேக், தனது கேரக்டரை பற்றி சற்று விளக்கமாகவே கூற ஆரம்பித்தார். நான்தான் பாலாவில் எனக்கு பெருமாள் கோவில் ஐயர் வேஷம். கோவிலுக்கு போய் பெருமாளுக்கு பூஜை செய்வது. வீட்டுக்கு வந்தால் அப்பா அம்மாவுக்கு பணிவிடை செய்வது என்று போகிறது வாழ்க்கை. நடுவில் ஒரு லவ். இந்த லவ்வை சேர்த்து வைக்க என்னுடைய நண்பன் பூச்சி முன் வருகிறான். அவன் கூலிப்படையில் வேலைசெய்யும் ஒரு அடியாள். அந்த நேரத்தில் ஏற்படும் ஒரு திடுக்கிடும் திருப்பத்தால், நான் என்னவாகிறேன் என்பதுதான் க்ளைமாக்ஸ். இப்படி சஸ்பென்சை உடைத்தும் உடைக்காமலும் கதை சொல்லி முடிக்கிறார் விவேக்.

படத்திற்கு படம் பெரியாரிசத்தை சொன்ன விவேக், இந்த படத்தில் பெருமாளிசத்தை சொல்லப் போகிறார். அப்படீன்னா…? இத்தனை வருஷம் கட்டி காப்பாத்துன பெரியாரிசம்? விவேக்கிடம் கேட்டால், விழுந்து விழுந்து சிரிக்கிறார். ‘நான் எந்த காலத்திலும் கடவுள் இல்லேன்னு சொன்னதேயில்ல. மூட நம்பிக்கைகளைதான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். என்றவரை இடைமறித்து, ஹீரோக்கள் எல்லாரும் பத்து கோடி பதினைஞ்சு கோடி சம்பளம் வாங்குறதாலதான் நீங்களும் ஹீரோவாகிட்டீங்களா? என்றால், ஆளைவிடுங்க என்கிறார் சிரித்துக் கொண்டே.

மீண்டும் படத்திற்குள் நம்மை இழுக்கிற விவேக், சொன்ன ஒரு தகவல் ஆஹா…. சுமார் 400 வருஷத்திற்கு முன் யாரோ எழுதிய ‘போஜனம் செய்ய வாருங்கள்…’ என்ற பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியிருந்தார். அதை மீண்டும் இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம் என்றார்.

அக்ரஹாரத்தின் ஆசியும் கிடைக்கட்டும். ஆல் சென்ட்டரிலிருந்து கைத்தட்டல்களும் கிடைக்கட்டும்!

kanjipuramkumbakonamms subbulakshminandhan balaperiyar to perumalSlidesongvivekvivek turn as a hero
Comments (0)
Add Comment