தமிழ்சினிமாவில் நல்லப்படங்கள் வரும்போதெல்லாம் இரண்டு கைகளையும் பன்னீரில் கழுவி, பக்தி பரவசத்துடன் கைதட்ட தயாராக இருக்கிறது தமிழகம். பரியேறும் பெருமாள், 96 என்று பரவசப்பட்ட ஜனங்களுக்கு அதே ஜானரில் இன்னொரு படம் வந்தால் எப்படியிருக்கும்?
ஸ்ரீ பிரியங்கா லேடி கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் ‘மிக மிக அவசரம்’ என்ற படம் அந்த சந்தோஷத்தை நிச்சயம் கொடுக்கும்! (அவ்ளோ நம்பிக்கை எப்படி? நாங்கதான் படத்தை பார்த்தாச்சே!)
இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படாத கதை மட்டுமல்ல, பெண்களின் வலியை அப்படியே ஒவ்வொரு மனசுக்கும் கடத்துகிற படமும் கூட! மேலதிகாரிகளின் தொந்தரவுக்கு ஆளாகிற ஒரு லேடி கான்ஸ்டபிளை சுற்றி சுற்றி வருகிற இந்தப்படத்தை இப்பவே சுமார் 300 பெண் காவலர்கள் பார்த்துவிட்டு கொண்டாடிவிட்டார்கள். யூனிபார்ம்தான் வேறு. ஆனால் உள்ளிருக்கும் மனசும், அது சொல்லும் வேதனையும் எல்லாருக்கும் பொதுவான ஒன்று அல்லவா?
தாய்குலங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைக்கப் போகும் படமாகவும் இது இருக்கும்.
கட்… இவ்வளவு பீடிகை எதற்கு?
சோப்பை எடுக்கும் போதே நுரை வழிவது போல, ‘மிக மிக அவசரம்’ பற்றி உலகமே பேசப்போவதற்கு முன் கருணை வழிந்திருக்கிறது. யெஸ்… தமிழக அரசு புதிதாக ஒரு திட்டம் வகுத்திருக்கிறது. காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் யாரும் இனிமேல் இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் இருக்க தேவையில்லை என்பதுதான் அது.
படத்தை இயக்கிய சுரேஷ் காமாட்சி, நாம் தமிழர் சீமானின் அன்பு தம்பிகளில் ஒருவர். அதனால்தான் இப்படியொரு சாட்டையை சுழற்றிவிட்டாரோ?