“…ந்தா அங்க ஒரு பிரஸ்காரன் நிக்குறான். புடிக்குதோ புடிக்கலையோ? ஒரு வணக்கத்தை போட்ருவோம்!” பெரும்பாலான ஹீரோக்களின் மனநிலை அதுவாகதான் இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு வரை. இப்போது இன்னும் கொடுமை.
“…ந்தா பிரஸ்காரனுங்கள்லாம் மொத்தமா நிக்குறானுங்க. சிக்குனா ஆட்டோகிராப், போட்டோன்னு சட்டைய கசக்கிடுவானுங்க. பங்ஷன் ஆரம்பிக்கிற வரைக்கும் கார்லேயே இருப்போம். ஆரம்பிச்சதும் ஸ்டேஜ்ல ஏறி, முடியறதுக்குள்ள கார்ல புகுந்துடுவோம்”. இப்படியாகிவிட்டது பரிணாம வளர்ச்சி.
குரங்கு மனுஷன் ஆகலாம். ஆனால் மனுஷன் குரங்காகிட்டே வர்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அண்மைக் காலம். அதை இன்னும் கேவலமாக்கியது சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ‘இருமுகன்’ படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தார் விக்ரம். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் ஏறக் கிளம்பியதுதான் தாமதம். முக்கால்வாசி சினிமா நிருபர்கள் அவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள தவியாய் தவித்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களே வரிசையில் நின்று கொள்ள, ஒரு வசதியான இடத்தில் நின்று கொண்ட விக்ரம், ஒவ்வொருவராக வரச்சொன்னார். அதற்கப்புறம், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வாரே… அந்த வேகத்தில் செயல்பட தொடங்கினார்.
‘நெக்ஸ்ட் நெக்ஸ்ட்’ என்று அவரே கழுத்தை பிடித்துத் தள்ளிக் கொண்டிருக்க, வெட்கமில்லாமல் சிரித்தபடியே முன்னேறிக் கொண்டிருந்தது கம்பீரத்தை நிலைநாட்ட வேண்டிய பிரஸ்.
இருமுகன் படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திரா, கேரளா என்று ஓடி ஓடி பேட்டி கொடுத்த விக்ரமிடம், அவ்வளவு அறிவுபூர்வமாக கேள்வி கேட்டு அசர வைத்தது அந்த ஊர் நிருபர் கூட்டம். இங்கோ, போட்டோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிடுவதற்கு பெரும் போராட்டம் நடத்துகிறார்கள்.
அட… இதிலும் தமிழன் தன் பெயரை கல்வெட்டுல பொறிக்கிறான்டா தினம் தினம்!
To listen audio click below :-