கங்கணா ரனவத் நடித்த ‘குயின்’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்திருக்கிறது. அதற்கப்புறம் அந்த படத்தை ரீமேக் செய்ய பலத்த போட்டி. தென்னகத்திலிருந்து கிளம்பிப் போய், பெரிய சூட்கேஸாக கொடுத்து, குயினின் ரைட்ஸை வாங்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன். குயின் ரயிலேறி வந்தாலும் சரி, பிளைட் ஏறி வந்தாலும் சரி, தமிழகத்தில் கால் வைத்த பின்பு ராணிதானே? ‘ராணி’ என்ற பெயரிலேயே இந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறார் தியாகராஜன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளில் ஒரு ரவுண்ட் தயாராக குயின் தயாராக இருக்க, சம்பந்தப்பட்ட ராணியை தேடும் வேட்டைதான் இன்னும் முடிந்தபாடில்லை.
முன்னணி ஹீரோயின்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் தியாகராஜன். நயன்தாரா நடித்த கஹானி பெரிய ஹிட் ஆகல. உண்மை அப்படியிருக்க, மறுபடியும் ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட்? எதுக்கு என்ற போது, கஹானி பற்றி நாம் பேசக் கூடாது. ஏன்னா அது இன்னொருத்தர் படம். ஆனால் குயின் படத்தில் இருக்கும் காட்சிகள் எதையும் மாற்றும் எண்ணம் இல்லை. அப்படியே அதை எடுத்தாலே படம் பெரிய ஹிட் ஆகும் என்றார் அவர்.
இன்றைய சினிமாவுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹரியை அறிமுகப்படுத்தியவரும், கந்தசாமி போன்ற மெகா பட்ஜெட் படங்களை இயக்கிய சுசி கணேசனை அறிமுகப்படுத்தியதும் தியாகராஜன்தான். இந்த ராணியை இயக்கவும் ஒரு நல்ல இயக்குனரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார். ஒருவேளை மனசுக்கு பிடித்த இயக்குனர் அமையாவிட்டால்?
தமிழ் திரையுலகத்தில் பழம் தின்று கொட்டை போட்டு, அந்த கொட்டையையே தோப்பாக்குகிற அளவுக்கு அனுபவம் வாய்ந்த பிரசாந்தின் தோப்பனாரே இயக்கி விடுவாராம். விளம்பரத்திலிருந்து படம் எடுப்பது வரைக்கும் தியாகராஜனின் நுணுக்கம் இப்பவே வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. முதல் அறிவிப்பு என்ன தெரியுமா? இந்த படத்திற்கு பொறுத்தமான ஹீரோயின் அமைந்தால், அவருக்கு குயின் பட ஹீரோயின் கங்கணாவே கிரீடம் சூட்டுவாராம். அதையும் சென்னையில் பெரிய விழாவாக நடத்தப் போகிறேன் என்றார் தியாகராஜன்.
எல்லாம் ஒரு வௌம்பரம்தான்!