ஒட்டுமொத்த கர்நாடகாவையும் கலங்கடித்த அந்த சம்பவத்தை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்டு காட்டுக்குள் வீரப்பனால் அலைகழிக்கப்பட்ட அந்த நாட்கள் மிக மிக பதற்றமான நாட்கள். பொதுவாகவே தமிழர்கள் என்றால், கத்தி போல கண்களை வைத்துக் கொண்டு குத்துவது போலவே நோக்கும் கன்னட வெறியர்கள், இன்னும் இன்னும் எரிச்சலானார்கள். நல்லவேளை… ராஜ்குமாரை உயிரோடு அனுப்பி வைத்தான் வீரப்பன். இல்லையென்றால் எத்தனை தமிழ் குடும்பங்கள் வீதிக்கு வந்திருக்குமோ?
அந்த பழைய சம்பவம் இப்பவும் சூடான நினைவுகளை தந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் இன்னொரு பெரிய அணுகுண்டை போட்டிருக்கிறார் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் தொடர்ந்து ரஜினியை விமர்சித்தே பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் தருமியாக திரியும் வர்மா கூறியிருப்பதென்ன? பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர், “வீரப்பன் முதலில் கடத்த திட்டமிட்டதே ரஜினியைதான்” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தாளு சொல்றதுல உண்மையிருக்குமா? இல்ல, பப்ளிசிடிக்காக பக்கோடாவ மெல்றாரா? என்று நினைக்கவும் வாய்ப்பில்லை. ஏனென்றால் இவரே ஒருமுறை வீரப்பனை நேரில் சந்தித்து பேசியவர்தானாம். அதுமட்டுமல்ல, வீரப்பன் கதையை படமாக்கி வருகிறார் அல்லவா? அதற்காக வீரப்பன் சம்பந்தப்பட்ட பலரிடம் பேசியிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அப்போது அவருக்கு கிடைத்த தகவலாக கூட இருக்கலாம் இது.
ஏற்கனவே ரஜினியை பல முறை விமர்சித்தும் அவருக்கு கிடைக்காத பப்ளிசிடி இந்த முறை கிடைத்துவிட்டது. இன்னைக்கு நிம்மதியாக தூங்குவார் வர்மா!