அருகிலிருக்கும் புகைப்படம் உங்களுக்கு வேறு ஏதாவது நினைவுகளை கிளப்பிவிட்டால் அதற்கு வாராகி பொறுப்பல்ல. தமிழக அரசியலில் சூறாவளியை உண்டாக்கும் புகைப்படங்கள் அநேகம் உண்டு. சில மாநிலத்தை கலவரப்படுத்தும். சில மத்தியில் போய் குத்த வைக்கும். சில மாதங்களுக்கு முன் கசிய விடப்பட்ட புகைப்படம் ஒன்று, மாநிலத்தையும் மத்தியையும் ஒரே நேரத்தில் உலுக்கித் தள்ளியது. அருகிலிருக்கும் இந்தப்படமும் அப்படியொரு சாயலில் இருப்பதால் இது அரசியல் படம்தான் என்று பலரும் நினைக்கலாம். அந்த நம்பிக்கையில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை அள்ளிப் போட்டு, ‘ஆமா… இது அரசியல் படந்தான். ஆனா நீங்க நினைக்கிற அந்த(?) படம் இல்லே’ என்கிறார் வாராகி.
இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவிருக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. அங்குதான் இந்த களேபர கருத்துச் சிதறல். படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்து, தயாரித்தும் இருக்கிறார் வாராகி. நடிகர் சங்க பிரச்சனையில் விஷாலுக்கு எதிராக முழங்கிய நபர்தான் இவர். சண்ட முடிஞ்சுது. சொந்த வேலையை பார்ப்போம் என்று பட வேலைகளில் இறங்கிவிட்டார்.
முதலில் இந்த கதையை சில ஹீரோக்களிடம் சொன்னாராம். ‘ஆள விடுங்க ஐயா சாமீய்’ என்று பதறி ஓடியிருக்கிறார்கள். அப்புறம்தான், நானே நடிக்கிறேன் என்று களம் இறங்கினாராம்.
படம் திரைக்கு வரும்போது புஷ்பா, சிவான்னு பெயர் உள்ளவங்க மட்டும், கந்தா கடம்பான்னு கதறாம இருக்கணும்.