“நாங்கள்லாம் ஒரே குடும்பம். இன்னைக்கு அடிச்சுப்போம்… நாளைக்கு கூடிப்போம்…” என்று அடிக்கடி கூறி வரும் நடிகர் சங்க பெருந்தலைகள் அந்த ஒரே குடும்பத்துக்குள் போட்டுக் கொள்கிற சண்டை, தெருவே ஸ்மெல் அடிக்கிற அளவுக்கு பீதியை கிளப்பி வருவதுதான் ஷாக்.
மைக்கை நீட்டினாலும் கருத்து. நீட்டாவிட்டாலும் கருத்து. மாடியில் நின்றாலும் கருத்து, மந்தையில் உருண்டாலும் கருத்து என்று வாயை நீளமாக்கி வைத்திருக்கும் இவர்களில் ஒரே ஒருவரை மட்டும் கோடம்பாக்கம் வியந்தபடியே நோக்குகிறது. அவர்தான் சரத்குமார். நடிகர் சங்க கடனை அடைத்து அடமான நிலத்தை மீட்ட பெருமை இவருக்கும் உண்டு. அதற்கப்புறம் திடீர் சக்தியாக உள்ளே குதித்த விஷால் பெற்ற வெற்றியும், சங்கம் பெரிய கட்டிடமாக வளர்ந்து நிற்பதும் கூட பாராட்டுக்குரியதுதான்.
ஆனால் பதவி ஆசையில் படபடவென வாயை விடும் இந்த இள ரத்தங்களுக்கு முன், சரத்குமாரின் அணுகுமுறையும் அமைதியும் நிஜமாகவே கிரேட்! “எனக்கு வாக்குரிமை இல்லை. இந்த நேரத்தில் நான் பேசுவது சரியா இருக்காது” என்று அமைதியாகவே இருக்கிறார் அவர். இத்தனைக்கும் முன்னணி சேனல்கள் பல அவரது வாயை பிடுங்கும் நோக்கத்தில் கட்டிங் பிளேயர், சுத்தியல் சகிதம் அவர் வீட்டு முன் குவிந்தும் எவ்வித பிரயோஜனமில்லை.
ஆனால் சரத்குமார் சும்மாயிருந்தாலும் அவர் மனைவி ராதிகாவும், மகள் வரலட்சுமியும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். பதில் மேல் பதில் சொல்கிறார் விஷாலும். சமீபத்தில் அவரது பாண்டவர் அணி வெளியிட்ட பிரச்சார வீடியோ, சும்மாயிருக்கும் சரத்தை ச்சும்மா ச்சும்மா சீண்டியிருக்கிறது.
எலக்ஷன் முடிவதற்குள் பி.பி. ஏறி, பின் மண்டை கிறுகிறுக்கும் போலிருக்கிறது. யாருக்கு?
வேறு யாருக்கு… நமக்குதான்!