நல்லவேளை… சசிகுமார் டைரக்டரை மிரட்டல!

‘அசுரவதம்’ என்று பெயர் வைத்துவிட்டு ஆக்ஷன் இல்லாமலா? அதுவும் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும் சசிகுமாரும் இணையும் 7 வது படம். உருட்டி எடுத்து உப்புக்கண்டம் போடுகிற அளவுக்கு வில்லனுக்கும் ஹீரோவுக்கும் சண்டையோ சண்டை. மருது பாண்டியன் இயக்கியிருக்கும் இப்படத்தை ரொம்பவே நம்பியிருக்கிறார் சசிகுமார்.

கிழிய வேண்டிய ‘தாரை தப்பட்டை’ சசிகுமாரையும் சேர்த்து கிழித்ததில் பலமாகவே சேதாரமாகியிருக்கும் அவர் தன்னை சூழ்ந்த கஷ்டங்களை ‘அசுரவதம்’ செய்வாரென்றே நம்பலாம். ஏன்? கதை அப்படி. இந்தக் கதையை மருதுபாண்டியன் சொன்ன நிமிஷம் சசிகுமார் செய்த முடிவே அந்த கதைக்கான முதல் மரியாதை. ஏன் இந்தப் படத்தை நாமளே தயாரிக்கக் கூடாது? இருந்தாலும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித், நானே தயாரிக்கிறேன் என்று முன்வர, நாற்பத்தி ஒன்பது நாட்கள்… ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டார்கள்.

“இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இருக்குதான். அதுக்காக இது வயலன்ட் மூவின்னு நினைச்சுராதீங்க. வில்லன் எந்தளவுக்கு ஸ்டிராங்கா இருக்கானோ, அந்தளவுக்கு ஹீரோவும் உடல் பலத்தை காட்ட வேண்டியருக்கும். அதனால் இந்தப்படத்தில் அதிக பைட் இருக்கு. கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் இடையே நடக்கிற போராட்டம்தான் கதை. அதை தாண்டி இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது” என்றார் சசிகுமார்.

‘சுப்ரமணியபுரம்’ மாதிரி படத்தை இயக்கிய ஒரு இயக்குனர்ட்ட கதை சொல்லப் போறேன்னு நினைச்சு ரொம்பவே அச்சப்பட்டேன். ஆனால் கதையை கேட்டுவிட்டு ஓகே சொன்ன பின் ஒரு சீன்ல கூட தலையிடல அவர் என்று சசிகுமாருக்கு ‘குட் மார்க்’ போட்டார் இயக்குனர் மருதுபாண்டியன்.

கஷ்டத்தையெல்லாம் ‘அசுரவதம்’ பண்ணிட்டு மீண்டு வாங்க சசி!

பின்குறிப்பு- முன்னணி நடிகைகள் நடிக்கத் தயங்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் நந்திதா. அப்படியென்ன பொல்லாத கேரக்டர்? அடுத்த வாரம் படம் ரிலீஸ். பார்த்தா புரிஞ்சுடப் போவுது!

Anbumani RamadossAsuravadham tamil MovieDhileep Subarayandirector balamaruthupandiyannandhithasasikumarthaarai thappattai
Comments (0)
Add Comment