கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும். தாரை தப்பட்டையில் சன்னாசியாக வந்து சங்கடம் தந்த சசி, அதற்கப்புறம் வெற்றி வேல் மூலம் கொடுத்தது கிண்ணம் நிறைய விளக்கெண்ணையை! அந்த படம் ஹிட்டு ஹிட்டு என்று பொய் செய்தியை பரப்பிய அவரது சிஷ்யர்களுக்கு இப்போது ஒரு விஷயம் விளங்காமல் இருக்கும்.
ஜி.வி.பிரகாஷ் படம் வெளிவராமல் முடங்குவதற்கு சசிகுமார் காரணமாகிவிட்டார் என்பதுதான் அந்த விளங்காமல் போன விஷயம்.
வெற்றி வேல் படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா பெயரில் வெளியிட்டார்கள் அல்லவா? தலைவலி இப்போது அந்த நிறுவனத்திற்கும் வந்துவிட்டதாம். அவர்கள் தயாரிப்பில் உருவான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த நேரத்தில் லைக்காவை தொடர்பு கொண்ட விநியோகஸ்தர்கள், “வெற்றி வேல் படத்தால் இவ்ளோ நஷ்டம் வந்திருச்சு. அதனால் நஷ்ட பணத்தை எண்ணி வச்சுட்டு எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை ரிலீஸ் பண்ணுங்க. இல்லேன்னா உங்க படம் வருவதில் சிக்கலை உண்டாக்குவோம்” என்று நேரடியாகவே எச்சரித்துவிட்டார்களாம்.
வரப்போகும் ஜுனில் பெரிய படங்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்த நேரத்தில் வந்தால் ஈஸியாக கல்லா கட்டலாம் என்று நம்பியிருந்த லைக்காவுக்கு இந்த எச்சரிக்கை பலத்த நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜி.வி.பிரகாஷ், இதென்னடா… ஆலமரம்னு ஒதுங்குனா அந்தரத்துலயிருந்து தேங்கா வந்து மண்டையில விழுதே என்று கலங்கிப் போயிருக்கிறாராம்.