ஒருத்தர் பிடுங்கலும் இல்லாமல் ஒரு படம் ரிலீசாகிவிட்டால் அது வானம் கொடுத்த வரம் என்றாகிவிட்டது. அநேகமாக எல்லா தமிழ் படங்களுமே ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு, ரத்த கறையோடு வெளியே வருகிற சூழ்நிலை கோடம்பாக்கத்தின் சாபக்கேடு.
அந்த வகையில் விஜய்சேதுபதி-அஞ்சலி இணைந்து நடித்த சிந்துபாத் திரைப்படம் இன்று வெளியாகவில்லை. பாகுபலி படத்தை தமிழகத்தில் வெளியிட்ட வகையில் சிந்துபாத் தயாரிப்பாளர் ராஜராஜன் சுமார் 18 கோடியை அந்த நிறுவனத்திற்கு தர வேண்டுமாம். அந்த பணத்தை கொடுக்காமல் இந்தப்படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவோடு வந்து படத்தை நிறுத்திவிட்டார் பாகுபலி தயாரிப்பாளர்.
நேற்று நள்ளிரவு வரை நடந்த பஞ்சாயத்து எவ்வித முடிவுக்கும் வராமல் முடிந்ததை அடுத்து சிந்துபாத் இன்று வெளியாகாது. இத்தனைக்கும் ராஜ ராஜன் தனது தயாரிப்பில் உருவாகி வரும் இரண்டு படங்களையும் இந்த பதினெட்டு கோடிக்கு ஈடாக கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியிருந்தும் ஏன் இப்படி?
இது போக, சிந்துபாத் படத்தை ராஜராஜனிடம் வாங்கி வெளியிடுவதாக இருந்த கிளாப் போர்டு சத்யா என்பவர் தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து சுமார் ஆறரை கோடி முன் பணம் வாங்கியிருக்கிறாராம். பணம் கொடுத்தவர்கள் பதறிப் போய் நிற்கிறார்கள்.
தனது படங்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் இப்படி ஏற்படுகிற இடையூறுகளை போக்க கை பணத்தை கொட்டி வந்த விஜய் சேதுபதி, இந்தப் படம் வந்தால் வரட்டும்… இல்லேன்னா கிடக்கட்டும் என்று செல்போனை ஆஃப் பண்ணிவிட்டு தியான நிலைக்கு போய் விட்டது தனிக்கதை.
ஒரு மனுஷனை குனிய வச்சு எவ்வளவு நாள்தான் குதிரை ஏற முடியும்?