விஜய் சேதுபதி ஒரு கோடி! யுவன் ஒரு கோடி! சிந்துபாத் ரிலீஸ் கன்பாஃர்ம்!

போன வாரமே தியேட்டருக்கு வந்திருக்க வேண்டிய ‘சிந்துபாத்’, தயாரிப்பாளரின் முந்தைய கணக்கு வழக்கு கடன் பஞ்சாயத்தின் காரணமாக முடங்கிவிட்டது. ஆசை ஆசையா நடிச்ச படம் இப்படி அரைகுறையா முடங்கியதில் விஜய் சேதுபதிக்கு வருத்தம்தான். ஆனாலும், “தம்பி நல்லாயிருக்கியா?” என்று கேட்டால் கூட, “நாலு ஜுர மாத்திரை வாங்கிக் கொடுப்பா…” என்று பாக்கெட்டில் கையை விடுகிற உலகமாச்சே? ஒருநாள் முழுக்க தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தார். அப்படியும் சென்ட்டிமென்ட் வளைத்து பிடித்துவிட்டது அவரை.

தன் பங்குக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறாராம். அதுவும் பிரபல பைனான்சியரும் தயாரிப்பாளருமான ஆர்.பி.சவுத்ரியிடம் கடன் வாங்கி. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப்பின் சிந்துபாத் வெளிவர மேலும் ஒரு கோடி தேவைப்பட, தயாரிப்பாளர் ராஜராஜனின் நெருங்கிய நண்பரும், தொழில் பார்ட்னருமான யுவன் சங்கர் ராஜா அந்த ஒரு கோடியை கொடுத்து உதவியிருக்கிறார்.

இதையடுத்து இம்மாதம் 28 ந் தேதி படம் திட்டமிட்டபடி வெளியே வரும் என்கிறார்கள். தனது ஒவ்வொரு பட வெளியீட்டின்போது இப்படி சிக்கல் ஏற்படுவது தொடர்பாக தனது கவலையை வெளியிட்டிருக்கிறார் விஜய்சேதுபதி. “உழைச்சு உருவாக்குறது ஒருத்தர். அதை பயன்படுத்த தயாரா இருக்கிறது இன்னொருத்தர். ஆனால் நடுவில் இருக்கிற சிலர், இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு காசு பார்க்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும்” என்றார்.

சுற்றியடிக்கிற சுச்சுவேஷன்களை சுலபமாக சமாளிக்கிற சுந்தர் பிச்சைகளே வந்தாலும், தமிழ்சினிமா வியாபாரம் அவர்களையும் சேதுவாக்கி அலைய விட்டுவிடும். ஐயோ பாவம்… விஜய் சேதுபதி புலம்பி என்ன நடந்துவிடப் போகிறது?

anjaliS.U.Arun Kumarvijay sethupathiVivek Prasannayuvan shankar raja
Comments (0)
Add Comment