சிவலிங்கா /விமர்சனம்

நீராவியால் இஞ்சினை ஓட வைக்க முடியும்னா, நிஜ ஆவியால் படங்களை ஓட வைக்க முடியும் என்று சந்திரமுகியில் பேய் பார்முலா எழுதிய பி.வாசு, பல வருஷம் கழிச்சு அதே பார்முலாவை மீண்டும் எழுதியிருக்கிறார். அது முகி. இது லிங்கா! பெண் ஆவிக்கு கொடுத்த பில்டப், இங்கு ஆண் ஆவிக்கு வழங்கப்பட்டாலும், நெட், போல்ட்டெல்லாம் சேம்தான்!

ரயிலில் தனியாக பயணம் செய்யும் சக்தி.பிவாசு, ஒரு மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவரது மரணத்திற்கு சாட்சி அவர் வளர்த்த புறா மட்டும்தான். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி, தன் காதல் மனைவி ரித்திகா சிங்குடன் ஒரு பங்களாவில் வந்து தங்க, இறந்து போன சக்தி, ஆவி ரூபத்தில் வந்து அவர் உடம்பில் அடைக்கலம் ஆகிறார். “என்னை கொன்னவன் எவன்னு கண்டுபிடி. அப்பதான் நான் உன் பொண்டாட்டிய விட்டு போவேன்” என்று அவர் அடம் பிடிக்க, ஆவி வளர்த்த புறா உதவியுடன் கொலைகாரனை லாரன்ஸ் கண்டு பிடித்து அழிப்பதுதான் சிவலிங்கா!

படத்தின் ஹீரோ லாரன்ஸ்தான் என்றாலும், அவருக்கு இணையான ரோலில் பர்பாமென்ஸ் பண்ணுகிறார் சக்தி. கொன்னவன் எவன் என்றே தெரியாமல் ஒரு ஆவி சுற்றுவது அநியாயத்திலும் அநியாயம். அந்த ஏக்கத்தையும், ‘அவன் மட்டும் கையில கிடைச்சான் நாலு நாளாவது வச்சு செய்யணும்’ என்கிற குரூரத்தையும் வெளிப்படுத்துகிறது அவரது முகம். நிஜமாகவே பரிதாமான ஆவி. ஆனால் நீ அவனை கண்டு பிடிக்கல… உன் பொண்டாட்டிய அடிச்சே கொல்லுவேன் என்று ரித்திகா சிங்கை புட் பால் போல சுவற்றிலும் தூணிலும் அடிப்பது எந்த விதத்தில் நியாயம் மிஸ்டர் ஆவிவாள்…?

நாலு பேருக்கு நல்லா சமைச்சுப் போட்டு அவங்க மனசு திருப்தியானா போதும்னு நினைச்ச என்னை ஏன் இப்படி கொன்னாங்க? என்று அவர் லாரன்ஸ் காலில் விழுந்து கதறும் போது ஒரு அச்சச்சோ போட வைக்கிறது அந்த பரிதாபத்திற்குரிய நடிப்பு. இதற்கப்புறம் சக்திக்கு ஒரு இடத்தை தரும் தமிழ்சினிமா.

போலீஸ் அதிகாரி லாரன்ஸ்சை கொஞ்ச நாளைக்கு முன்புதான் மொ.சி.கெ.சி யில் பார்த்தோம். அதே ஸ்பீட், அதே லாவகம், அதே டான்ஸ். இங்கு ஜோடிதான் வேற வேற… ஒரு சேஞ்ச் என்னவென்றால், இந்தப்படத்தில் இவர் சின்ன கபாலியாம். பரங்கிமலையை கொஞ்சம் கொஞ்சமா சுரண்டுனாலும், இன்னொரு இடத்தில் குவித்தால் அதற்கு பெயர் மலையல்ல. மண் மேடு. அதே மாதிரி ரஜினியை எவ்வளவுதான் சுரண்டுனாலும்…. (புரிஞ்சுக்கோங்க மாஸ்டர்) க்ளைமாக்ஸ் பைட் நம்ம மேல லோட் ஆகணும் என்று முடிவு பண்ணிவிட்டார் லாரன்ஸ். வாயேன்… என் உடம்புக்குள்ள புகுந்துக்கோயேன் என்று ஆவியை கெஞ்சி, உடம்புக்குள் வரவழைத்து போட்றார் பாருங்க ஒரு பைட். யம்மாடி யம்மா. தியேட்டர் கூரை இடிஞ்சுருமோங்கிற அளவுக்கு ஸ்பீட்!

ரித்திகா சிங் தன் மேக்கப்பை மட்டும் குறைத்திருந்தால் மனசுக்கு ரம்மியமாக இருந்திருக்கும். இவரது உடம்பில் ஆவியை புகுத்த வேண்டும் என்று நினைத்துவிட்டார் இயக்குனர். அதற்கு பொருத்தமான ஜிம் பாடியாச்சே? ரோப்பை கட்டி அந்தரத்திலேயே தொங்க விட்டிருக்கிறார்கள். தன் பணிச்சுமையை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பந்தாடியிருக்கிறார் ரித்திகாசிங். பாராட்டுகள்… அப்புறம், டான்ஸ்களில் அவரது விவகாரமான ஆட்டமும், டிரஸ் சென்சும், பல லெவலுக்கு இறங்கியடித்திருப்பதால், ரெகுலர் கவர்ச்சி நாயகிகள் இனி ரித்திகாவுக்காகவும் அஞ்ச வேண்டி வரும்.

சின்ன இடைவேளைக்குப்பின் வடிவேலு. நல்லவேளை… சில இடங்களில் சிரிக்க விடுகிறார். சில இடங்களில் வெறுக்க விடுகிறார். “ஆமாம்… ஏன் புத்தர அந்தப்பக்கம் திருப்பி வச்சுருக்காங்க?” என்று அவர் டவுட் கிளப்புகிற காட்சியில் மட்டும், அந்த காலத்து வடிவேலு வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

பானுப்ரியா, ராதாரவி, ஊர்வசி, ஜெயப்ரகாஷ், சந்தானபாரதி என்று பெரும் கூட்டம் இருக்கிறது.

எஸ்.எஸ்.தமனின் பாடல்களில் பல ட்யூன்கள் ரிப்பீட். அதுவும் மண்டபத்தில் இரவல் வாங்கப்பட்டது என்பது ஷாக். ஆனால் வந்திங்களா, ரசிச்சீங்களா, எதுக்கு ஆராய்ச்சி என்று அந்தக்கணத்தில் ரசிக்க வைக்கிறார் மனுஷன். குறிப்பாக அந்த ரங்கு ரக்கர பாடல், சூப்பரோ சூப்பர். பின்னணி இசை ஓ.கே.

டான்ஸ், பைட் என்று கமர்ஷியல் மசாலாவுக்கேற்ற காரம் மணம் குணத்துடன் விருந்து படைத்திருக்கிறார் பி.வாசு.

எப்படியிருந்தாலும் சந்திரமுகியை எதிர்பார்த்து உள்ளே போனால், அங்கு அரைகுறை சந்திரகிரஹணம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

https://youtu.be/RXsEgkEWbWg

banupriyaDance Masterhorror moviep vasuRadha Raviragava lawranceRithikaSinghshakthi p vasusivalinga tamil movie reviewss thamanUrvasivadivelu
Comments (0)
Add Comment