சுவாதி கொலை கேஸ்! படமாவது உண்மையை பேசுமா? கோடம்பாக்கம் வெயிட்டிங்!

மருதமலை அர்ஜுன்கள் இருக்கும் நாட்டில்தான், மாமூல் வாங்கும் வடிவேல்களும் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார விந்தையை ஒழிக்கவோ, அழிக்கவோ ஒருவரும் பிறக்கவில்லை. அந்த காமெடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவ்வப்போது நடக்கும் அத்துமீறல்களால் ஆயுளுக்கும் நினைத்து நினைத்து சங்கடப்படுகிற சம்பவங்கள் மட்டும் மாறாவே மாறாது க்ரைம் ரெக்கார்டுகளில்! அப்படியொரு க்ரைம் ரெக்கார்டுதான் சுவாதி கொலை வழக்கு!

நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் அதிகாலை நேரத்தில் குத்திக் கொல்லப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர் சுவாதியின் கதை, பல்வேறு திருப்பங்களுடன் அரங்கேறி… கடைசியில் ஒரு நாள் முடிந்தே போய்விட்டது. யெஸ்… கொலையாளி என்று கருதப்பட்ட ராம்குமார் திடீரென சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டான். அது தற்கொலைதானா? அல்லது கொலையா? சுவாதியை கொன்றவன் ராம்குமார்தானா? அல்லது சுவாதி மரணத்திற்கு பின் இன்டர்நேஷனல் தீவிரவாதிகளின் கைவரிசை இருக்கிறதா? இப்படி ஓராயிரம் கேள்விகளால் குழம்பிப் போன திருவாளர் பொதுஜனம், ஜெ. மரணம்… சசிகலா கைது… விவசாயிகளின் நிர்வாண போராட்டம்… பாகுபலி 2 என்று தன் மைண்டை ஓவராயில் செய்து கொண்டது.

இதோ- மீண்டும் சுவாதி. இந்த முறை சுவாதியின் கதையை திரைப்படமாக எடுத்து, மீண்டும் வீட்டுக்கு வீடு பேச வைக்க வந்திருக்கிறார் ரமேஷ் செல்வன். உளவுத்துறை, ஜனனம் என்று முந்தைய படங்களால் கவனம் ஈர்க்கப்பட்டவர், இப்போது துணிச்சலாக இந்த சப்ஜெக்டை கையில் எடுத்திருப்பதால், நிம்மதியாக இது ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகமும் கூடவே முளைத்திருக்கிறது.

நல்லவேளை… இந்தப்படம் சோஷியல் மீடியாக்கள் ஸ்டிராங்காக இருக்கிற காலத்தில் வரப்போகிறது. ஒருவேளை படத்திற்கு யாரேனும் ட்ரபிள் கொடுத்தால், தட்டிக்கேட்க மக்கள் இருக்கிறார்கள் என்றார் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்கு வந்திருந்த கவிஞர் சினேகன்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஒரு மாதம் ஹோம் வொர்க் செய்தாராம் ரமேஷ்செல்வன். பல போலீஸ் உயரதிகாரிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தப்படம், உண்மையை பேசுமா? அல்லது பத்திரிகை செய்திகளின் ஒரு தொகுப்பாக இருக்குமா? காத்திருக்கிறோம். ஏதாவது புதிய தகவல் சொல்லப்பட்டால் ஒழிய ரமேஷ் செல்வனின் இந்த முயற்சிக்கு ஒரு லைக் கூட விழாது. மாறாக சுவாதி கொலைக்குப்பின் நடந்த சில உண்மைகளை உடைத்தாரென்றால், விழும் லைக்குகளை அந்த கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது. என்ன செய்யப் போகிறீர்கள் ரமேஷ்?

https://youtu.be/xYztQ-mz12M

Hot subjectNungambakkam railway stationOriginal StoryRamkumarSD Ramesh selvanSwathi Murder caseTamilnadu police
Comments (0)
Add Comment