மக்கள் பிரச்சனை பற்றி பேசப்போகும் தெருநாய்கள்!

மக்கள் பிரச்சனையை பேசுகிற சினிமாவை யார் தயாரித்தாலும், அதை தலைவணங்கி வரவேற்பதுதான் முறை. இப்படி வரவேற்கிற கூட்டம் பெருகினால் போதும். தமிழ்நாட்டு உரிமையில் கை வைக்கிற துணிச்சல் எவனுக்கும் இருக்காது. அப்படியொரு நல்ல நோக்கத்தை தன் படத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறார் செ.ஹரி.உத்ரா. சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்த இந்த இளைஞருக்கு, கடைமடை விவசாயிகள் பற்றிய அக்கறையும் அன்பும் மிக துணிச்சலாக ஒரு படத்தை இயக்கத் தூண்டியிருக்கிறது.

தமிழகத்தில் இன்று மிக முக்கிய பிரச்சனையாக தலைவிரித்தாடுவது, விவசாயிகளின் கண்ணீர்தான். பருவ மழை கை கொடுக்காததாலும், கர்நாடகத்திலிருக்கும் தமிழனின் உரிமை உச்ச நீதிமன்றத்தாலேயே கூட தீர்க்க முடியாமலிருப்பதாலும் அன்றாடம் எலிக்கறி, அவசரமில்லாமல் தற்கொலை என்று படுபயங்கர முடிவுக்கு போகிறார்கள் அவர்கள். இந்த லட்சணத்தில் கொஞ்ச நஞ்ச விவசாயத்தை குழி தோண்டி புதைப்பது போல மீத்தேன் பிரச்சனையும் வந்து சேர்ந்து கொள்ள…. எந்த பக்கம் போனாலும் முட்டு சந்தா இருக்கேடா… என்று விழி பிதுங்கிப் போகிறான் விவசாயி.

இந்த நெடுவாசல் பிரச்சனையைதான் படமாக எடுத்திருக்கிறார் செ.ஹரி.உத்ரா. படத்தின் பெயர் ‘தெருநாய்கள்’. இந்த தலைப்புக்கான காரணம் படத்தில் படு ஷார்ப்பாக சொல்லப்பட்டிருக்கிறதாம். மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு மே மாதம் திரைக்கு வரும் முயற்சியில் இருக்கிறார் செ.ஹரி.உத்ரா.

மைம்கோபி, அப்புக்குட்டி உள்ளிட்ட சில பார்த்த முகங்கள் இருந்தாலும், புதுமுகங்களை நம்பிதான் இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தில் ஹாட்டான விஷயத்தை கையில் எடுத்தாலும், மிக மெல்லிய காதல் ஒன்றும் படத்தில் இருக்கிறதாம்.

கார்ப்பரேட் அரசியலின் வளர்ச்சி, சமுதாயத்தின் வீழ்ச்சி என்று இரட்டை வரிகளில் மொத்த விஷயங்களையும் சொல்லப் போகும் இந்த அறிமுக இயக்குனரின் துணிச்சலுக்கு, அன்பான சல்யூட்!

https://youtu.be/lWYeOLZDGYY

Meethen gasneduvasal issuepeople problems hari uthraTheru Naaigal Movie StillsWorking Stills
Comments (0)
Add Comment