தாடியால் அடர்ந்த முகம் இருட்டாக இருந்தாலும், அறிவு நிறைந்த கேள்விகளால் வெளிச்சமாகதான் இருக்கிறார் ராம்! சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்திருக்கும் தரமணி படம், தமிழ்நாட்டில் ஒரு அலையை கிளப்பிவிட்டிருக்கிறது. சினிமான்னா இப்படிதான் என்கிற இலக்கணத்தையெல்லாம் அப்படத்தின் மூலம் உடைத்திருக்கும் ராம், பல பெண் எழுத்தாளர்கள் மற்றும் கவிதாயினிகள் வாயில் விழுந்து வசவு வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தனி.
தமிழ்சினிமாவின் முக்கிய படைப்புகளில் ஒன்றாகிவிட்ட தரமணியின் சக்சஸ் மீட்டுக்கு வந்திருந்தார் ராம். அவரிடம் பல கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் இது. உங்க படத்தில் மத்திய அரசை தாக்குன அளவுக்கு மாநில அரசை பற்றி பேசலையே?
“மாநில அரசுன்னு ஒண்ணு இருந்தால்தானே?” என்று அதற்கு பதிலளித்துவிட்டு அமர்ந்துவிட்டார் ராம். அதற்கப்புறம் வந்து மைக்கை பிடித்தவர், “ஏன் அப்படி சொன்னேன்னா… ரேஷன் கார்டுகளால் பயனில்லாமல் போகும்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சொன்னார் திருமுருகன் காந்தி. மக்களுக்காக அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் மீது, குண்டர் சட்டம் பாய்ச்சுகிறது அரசு. மத்திய அரசின் கட்டளையை ஏற்று செய்யும் இந்த மாநில அரசு, தற்போது சுயமாக எந்த முடிவும் எடுக்கக் கூடிய நிலையில் இல்லை என்பதைதான் அப்படி சொன்னேன்” என்றார்.
சினிமாவோ, அரசியலோ… வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் ராம்! அப்படிப்பட்டவரா துண்டை காணோம்… துணியை காணோம்னு பதில் சொல்லப் போறார்?