தியேட்டர் கொள்ளை! திருந்தணும் உடனே!! தயாரிப்பாளரின் பேச்சால் சலசலப்பு

பொதுவிழாக்களில் நியாயமான விஷயங்கள் எதுவாக இருந்தாலும் பட் பட்டென்று பேசிவிடுகிற ‘கோப’சாமிகளில் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தில்லுதான் பேக்ரவுண்ட்! சொல்லுதான் ட்ரூ பிரண்ட்! என்று எப்போதும் சூடும் குளிர்ச்சியும் சேர்ந்தே அடிக்கும் சுரேஷ் காமாட்சி, நேற்று சாரல் பட விழாவில் பேசியது சத்தியத்திலும் சத்தியம்!

“இங்கு பேசிய பலரும் இது ஒரு குடும்ப விழா என்றார்கள். ஒரு இசை வெளியீட்டு விழா குடும்ப விழாவாக இருக்கக் கூடாது. இன்றைக்கு தயாரிப்பாளர்கள் நிலைமை மோசமாக உள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் சிறு பட்ஜெட் படங்களை பிரபலமாக்குவதற்கு உள்ள வழி. இந்த நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களைத்தான் அதிகம் அழைக்க வேண்டும். (அவர் இவ்வாறு பேசியதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளருக்கு தேவையான சொந்த பந்தங்கள் அரங்கை நிறைத்துவிட, பல பத்திரிகையாளர்களுக்கு இடமே இல்லை. அதனால்தான்) சிறிய படங்கள் மக்களைச் சென்றடைய பத்திரிகையாளர்கள், குறிப்பாக இணையதளங்கள்தான் முக்கியம்.

இப்போது படங்கள் எடுப்பதைவிட, அதை எடுத்து வெளியிடுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. இப்போது கூட செங்கல்பட்டு ஏரியா திரையரங்குகளில் படம் வெளியிட முடியாத சூழலை சிலர் உருவாக்கியுள்ளனர். இந்த விஷயத்தில் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம். தாணு என்ற பெரிய தயாரிப்பாளருக்கே இந்த நிலை என்றால், சிறு பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் இவர்களிடம் என்ன பாடுபடுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தியேட்டர்களில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும், படங்களுக்கு எம்ஜி முறை கூடாது என்றெல்லாம் இப்போது திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். கட்டணத்தைக் குறைப்பது இருக்கட்டும். முதலில் அங்குள்ள கேண்டீன்களில் விற்கப்படும் பாப்கான், தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பாருங்கள். தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் போகக் காரணம் என்ன? திருட்டு விசிடி மட்டுமா… என்னதான் இணையதளங்களில் படங்கள் வெளியானாலும், நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்காமல் இருந்ததில்லை. ஆனால் அப்படிப் பார்க்க நல்ல அரங்குகள் வேண்டாமா? சென்னைக்கு வெளியே பல தியேட்டர்கள் மக்கள் படம் பார்க்கும் நிலையிலா இருக்கின்றன? அடிப்படை வசதி இல்லை. கேன்டீன்களில் அநியாய விலை. தேவையற்ற பார்க்கிங் கட்டணம் இப்படி ஏகப்பட்ட குறைகளைச் சொல்கிறார்கள் மக்கள். இதனால் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள்.

அதே போல தயாரிப்பாளர்களுக்குத் தரவேண்டிய சதவீதத்தை யாரும் ஒழுங்காகத் தருவதில்லை. சென்னை அரங்குகள் சரியாகத் தருகின்றன. ஆனால் மற்றவர்கள் அப்படியா…? தினந்தோறும் மக்களிடம் பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் அந்தப் பணத்தை வாரம் ஒரு முறையாவது தயாரிப்பாளருக்குத் தருகிறார்களா? இல்லை. பல தயாரிப்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து அவர்களுக்குரிய பங்கைத் தந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இப்படி சினிமாவை முடக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் வந்தால்தான் சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க முடியும்.

இந்த சாரல் படம் வெளிவரும்போது, நல்ல சூழல் அமைந்து படமும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.​

distributersexibitersfilm producersGangarupriyankaRuralSaaral Audio ReleaseSlideSuresh kamachiTamilNadu Theaters
Comments (0)
Add Comment