தொட்ரா / விமர்சனம்

ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் முன், சத்தம் போடாமல் சரிந்து விழும் காதலர்களை பற்றிய கதைதான் ‘தொட்ரா’! தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் இருப்பதால் தென்மாவட்டங்களில் தீப்பிடிக்கலாம். வட மாவட்டங்களில் வயிறெரியலாம். ‘நான் சாதிப் பெருமை பேசுகிறவன் தான்டா, அதுக்கென்ன இப்போ?…’ என்று அடித்தொண்டையால் சுவாசிக்கும் அத்தனை பேருக்கும் இந்த படம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி காதலிக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். முடிவுதான்… மூளையை சின்னா பின்னமாக்குகிறது. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், ‘காதல்’ பார்ட் 2 வாகக் கூட வந்திருக்க வேண்டிய படம். பட்…?

பழனி அடிவாரத்தில் வசிக்கும் ப்ருத்விராஜுக்கு, அதே ஏரியாவிலிருக்கும் சாதிப் பிரமுகரான எம்.எஸ்.குமாரின் தங்கை வீணா மீது லவ் வருகிறது. கடையில் விற்கும் கை முறுக்கு ரேஞ்சில் காதலை டீல் பண்ணுகிறார்கள் இருவரும். ஒரு எக்குதப்பான நேரத்தில் எஸ்கேப் ஆகிற ஜோடிகளை தேடி, எம்.எஸ்.குமார் அண் கோ அலைகிறது. காதல் ஜோடியை பலவந்தமாக பிரிக்கிற அண்ணன், கோர்ட் உத்தரவின் பேரில் தங்கையை அங்கு கூட்டிவர, கோர்ட்டின் முடிவென்ன? காதல் வென்றதா? இதுதான் க்ளைமாக்ஸ்.

படம் சூடு பிடிப்பதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதுவரைக்கும் உப்புசப்பில்லாத சீன்களால் தள்ளு வண்டி டிரைவர் ஆகிவிடும் அறிமுக இயக்குனர் மதுராஜ், அதற்கப்புறம் அதே தள்ளு வண்டியை திடீர் பென்ஸ் காராக்கி திகைக்க விடுவது சிறப்பு. அதுவும் காதல் ஜோடிக்கு சங்கர், திவ்யா என்று பெயர் வைத்திருப்பதன் மூலம், அண்மையில் நடந்த ஆணவக்கொலையை கண்முன் கொண்டு வருகிறாரா… பதறுகிறது மனசு. பட்ட பகலில் நட்ட நடு சாலையில் நடந்த அந்தக் கொலை கிளிப்பிங்சை ரெபரென்ஸ் ஆக வைத்துக் கொண்டு படம் பிடித்திருக்கிறார்கள். அந்த நிமிஷக் காட்சிகள் மட்டும் திக் திக்!

ப்ருத்விராஜுக்கு ஏற்பட்ட தொடர் சறுக்கலை இந்தப்படம் முட்டுக் கொடுத்து நிமிர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. நமது கடைசி துடுப்பு இதுதான் என்பதை உணர்ந்து போராடியிருக்கிறார் இவரும். குறிப்பாக அந்த கல் குவாரியில் அடிபட்டு கதறும் காட்சிகள், பதற வைக்கிறது.

ஹீரோயின் வீணாவுக்கு கதை பேசும் கண்கள். தேவைப்படுகிற அளவுக்கு கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் பாசக்கார அண்ணன். இன்னொரு பக்கம் உயிரை கொடுக்கும் லவ்வர். என்ன முடிவெடுப்பது என்று தவியாய் தவிக்கும் வீணா, அடர்த்தியான கதைகளுக்கேற்ற அல்டிமேட் வரவு!

வில்லன் எம்.எஸ்.குமாருக்கு கை கூடி வருகிறது நடிப்பு. அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாதளவுக்கு பர்பெக்ஷனில் கலக்குகிறார். கடைசிவரைக்கும் இந்த அண்ணன் தன் சாதி மீது தீராத பற்று கொண்டிருந்தால், அந்த கேரக்டர் சறுக்கியிருக்காது. படமும் சறுக்கியிருக்காது. தேவையில்லாத காம்ப்ரமைஸ்!

பணம் பறிக்க என்னென்னவோ வியாபாரம். ஆனால் ஏ.வெங்கடேஷ் செய்யும் காதல் வியாபாரம் புதுசோ புதுசு. (இதெல்லாம் நிஜத்தில் நடப்பதாக இயக்குனர் பிரஸ்மீட்டில் தெரிவித்ததால் மட்டுமே இதை நம்ப வேண்டியிருக்கிறது) பணத்தின் மீது குறி வைப்பவர் திடீரென ஹீரோயினை பயன்படுத்த அலைவதுதான் படு பயங்கர டிராமாவாக இருக்கிறது.

கண்ணழகி சூசன், மைனாவுக்கு பின் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அவரது கோவக்கார இமேஜூக்கு மீண்டும் ஒரு பெருந்தீனி.

ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் ஈர்ப்பு. புதியவர் என்றாலும், பின்னாளில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிப்பார் என்று நம்ப வைக்கிற ட்யூன்கள் அத்தனையும்.

ஒளிப்பதிவாளர் செந்திலின் பல்வேறு கோணங்களை விடுங்கள். அந்த கொலைக்காட்சி… அப்படியே கண்முன் வந்து கலங்க விடுகிறது.

தொட்ரா… எலும்பை முறிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் சுளுக்கி அனுப்புகிறார்கள்!

-ஆர்.எஸ்.அந்தணன்

AJohnCameraman SenthilCast feelingJayachandraMadhuRajMS KumarprithvirajRN UthamarajaSouth Side MurdersThodra Movie ReviewVeena
Comments (0)
Add Comment