உப்புக்கருவாடு விமர்சனம்

ஒரு சினிமா இயக்குனர் ‘காய்ந்து கருவாடு’ ஆவதுதான் கதை! கருணாகரன், சாம்ஸ், டவுட் செந்தில், நாராயணன் போன்ற ஒட்டாத மாவைக் கொண்டு ‘கெட்டி உருண்டை’ செய்வது சாத்தியமா என்ன? (அ)சாத்தியப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்! ரசிகர்களின் மனசை பல்லாங்குழியாடும் ராதாமோகனின் மொழி இந்த படத்திலும் நின்று விளையாடியிருப்பதில் வியப்பொன்றும் இல்லையே?

முதல் படம் ஆவரேஜ், இரண்டாவது படம் பாதியிலேயே டிராப். மூன்றாவது படத்திற்காக ஏகப்பட்ட காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டு படம் இயக்க ஆயத்தமாகிறார் டைரக்டர் கருணாகரன். தயாரிப்பாளரின் மகளே ஹீரோயின் என்பதால், முதலில் அவருக்கு ரிகர்சல் அளிக்கிறார்கள். இந்த ரிகர்சல் காலத்திலிருந்து ஷுட்டிங் துவங்குகிற அந்த முதல் நாள் வரைக்கும் நடக்கிற கூத்தும், கும்மாளமும், சென்ட்டிமென்ட் டச்சுகளும்தான் திரைக்கதை பயணம். நடுநடுவே ஒரு ஆக்ஷன் படத்திற்குரிய ட்விஸ்ட்டையும் க்ளைமாக்ஸ் வரை மெயின்டெயின் பண்ணுகிறார்கள். அந்த முடிவு? தியேட்டரே கொல்லென்று சிரிக்கிற முடிவுதான்! தன் சினிமாவின் கதையை, இதே சினிமாவுக்குள்ளிருக்கும் நிஜத்திலிருந்தே எடுத்திருக்கிறார் ராதாமோகன். நமக்குப் புரிகிறது. ஜனங்களுக்கும் புரியும்!

படத்தின் முதல் ஹீரோ டயலாக் ரைட்டர் பொன் பார்த்திபன்தான்! படம் நகர நகர இரண்டிரண்டு வரிகளுக்கு நடுவே ஒரு வெடியை கொளுத்திப் போடுகிறார். சிரித்து முடிப்பதற்குள் அடுத்ததாக இன்னொன்று. எந்த டயலாக்கும் கதைக்கு அவசியமில்லாமல், அங்கே இங்கே நகரவில்லை என்பது படத்தின் அதிர்ஷ்டம். மற்றொன்று… கதைக்கு சம்பந்தமேயில்லை. ஆனால் நடுவில் கிராஸ் பண்ணிவிட்டு போகும் கேரக்டர்கள். அதிலும், அந்த பாடகர்… யப்பா. சிரிச்சு முடியல!

ஒரு சீன் ஒவ்வொரு உதவி இயக்குனராலும் எப்படி முழுமையடைகிறது என்பதை சினிமாவுக்கு வெளியே இருக்கும் ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் மூன்று விதமாக யோசிக்கிறார்கள். மொக்கை, படு மொக்கை, ஆஹா என்கிற விதத்தில் அமைகிறது அது. மூன்றுக்கும் கைதட்டி மகிழ்கிறது தியேட்டர். அதுதான் ராதாமோகனின் மேஜிக்!

கருணாகரன் முகத்திற்கு அதிக எக்ஸ்பிரஷன் தேவைப்படவில்லை. அதனால் தப்பிக்கிறார். தன் படத்தின் ஹீரோயினை பூங்கிலி என்று சொல்லும் அடியாளிடம், அவ்வளவு கோபத்திற்கு நடுவிலும், “பூங்குழலி” என்று ஆக்ரோஷமாக கிளாஸ் எடுத்துவிட்டு போகிறாரே… செம்ம!

சமுத்திரதேவி என்கிற தலைப்பையே சமூத்திரதேவி என்று எழுதுகிற ஒரு அசிஸ்டென்ட்டை வைத்துக் கொண்டு கருணாகரன் டீம் படும்பாடு, சிரிப்புப் பிரியர்களுக்கு செமத் தீனி! அவர் பேசும் இங்கிலீஷும், சாந்தம் தவழும் அந்த முகமும், ஒட்டுமொத்த கனவுக்கே அவர் வைக்கும் வேட்டு சப்தமும்… “யார்றா இந்த பையன்?” என்று கேட்க வைக்கிறார் டவுட் செந்தில். “என் சண்முகத்துக்கு ஒண்ணுன்னா நான் பார்த்துகிட்டு இருக்க மாட்டேன்னு சொல்றாங்களே, யார் சார் அந்த சண்முகம்?” என்று இவர் அப்பாவியாக கேட்கிறாரே… அதற்காகவே இன்னொரு முறை தியேட்டருக்கு போகலாம்.

இந்தப்படத்தின் ஆகப்பெரிய ஆச்சர்யமே சாம்ஸ்சை நம்மால் சகித்துக் கொண்டு சிரிக்க முடிவதுதான்! மற்ற படங்களில் வருவது போலவே இந்த படத்திலும் முழுக்க அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார். காதை பொத்தி பழகிய நம் கைகள், அதையும் மறந்து ரசிக்கிறதே… “என்னடா நடக்குது தியேட்டருக்குள்ள?”

கண்களை அகலமாக விரித்து ஒவ்வொரு டயலாக்கையும் ஸ்கூல் பிள்ளை போல சொல்லி மகிழும் நந்திதாவும் ரசிக்க வைக்கிறார். ‘நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம். ரோஜாப்பூவை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்’ என்று அவர் பாட, டைரக்டர் கருணாகரன் விழியை பார்க்க வேண்டுமே? தன் பப்ளிமாஸ் கண்ணாலும், முகத்தாலும் கவர்கிறார் சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா!

ஒரு ரவுடியாக இருந்தாலும், தமிழ் ரவுடியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் கூட நமது தயாரிப்பாளர்களில் ஒருவரை ஞாபகப்படுத்துகிறார். என்ன ஒன்று இவர் வேட்டி! “நான் எழுதுற கவிதை முதல்ல என்னை பாதிக்கணும். அது எப்ப நடக்குதோ, அப்பதான் என்னை நான் கவிஞன்னு ஒத்துப்பேன்” என்று அவர் பேத்துவதெல்லாம் நன்றாகதான் இருக்கிறது. அதே ரெண்டு வரிக்கவிதைதான் அவரிடமிருந்து மற்றவர்களின் உயிரை காக்கிறது என்பதெல்லாம் சற்றே டிராமாட்டிக்! எம்.எஸ்.பாஸ்கருக்கு எந்நேரமும் ஆன்மீக அட்வைஸ் வழங்கும் டாடி சரவணனின் கெட்டப்பும் மிமிக்கிரியும் கலகலப்பு.

எதற்கெடுத்தாலும் ஒரு சென்ட்டிமென்ட் சொல்லும் மயில்சாமி ரோல் வழக்கம் போல அவருக்கு 100 மார்க் வாங்கிக் கொடுத்துவிடுகிறது. எல்லா நடிகர்களுக்கும் சிகரம் வைத்தார் போல, அலட்டல் இல்லாமல் நடித்து பிரமாதப்படுத்தியிருக்கிறார் குமரவேல்! அதென்னவோ தெரியல… ராதாமோகன் மட்டும்தான் இவரை உருப்படியாக பயன்படுத்துகிறார். மற்றவர்களும் தொடரட்டும்…

இவ்வளவு நேர்த்தியான கதையில், பாடல்கள் கேட்கும்படி இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்? ப்ச்!

தட்டையான கதைக்குள், ஒரு ஆக்ஷன் படத்திற்குரிய வியப்பு மற்றும் திகைப்பு கோணத்தை பிக்ஸ் பண்ணி மிரட்டியிருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.ஜெய்!

கருவாடுதான்! ஆனால் தாழம்பூ மாதிரி தலையிலேயே சூடிக் கொள்ள வைக்கிற கருவாடு!!

-ஆர்.எஸ்.அந்தணன்

doubt senthilkarunaharanmsbhaskarnandhidhapon.parthibanRadhamohanReviewSlideuppukaruvadu
Comments (2)
Add Comment
  • அந்துவன் மொந்தைக்கள்ளு

    // “என் சண்முகத்துக்கு ஒண்ணுன்னா நான் பார்த்துகிட்டு இருக்க மாட்டேன்னு சொல்றாங்களே, யார் சார் அந்த சண்முகம்?” என்று இவர் அப்பாவியாக கேட்கிறாரே…//

    இணையம் அளித்த கொடை!

  • suri

    Enjoyable movie