குள்ள மனிதர்களின் சூழ்ச்சிக்கு மத்தியில் விஜய்?

நவீன தமிழ்சினிமாவில் வழக்கொழிந்து போன விஷயங்களை வாரியெடுத்து பந்தி வைப்பவர் டைரக்டர் சிம்புதேவன். ‘இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’ படம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ‘ராஜா கதை சினிமாவாக வந்து அநேக வருஷமாச்சே? அதிலும் வடிவேலுவை ராஜாவாக பார்ப்பது அண் சகிக்கபுள் சமாச்சாரமாச்சே’ என்றெல்லாம் கலங்கி தவித்தது ரசிகர் கூட்டம். ஆனால் அந்த படத்தின் ஓப்பனிங்கும் ரிசல்ட்டும் ரஜினி படத்திற்கு இணையானது என்கிறது மாற்ற முடியாத ஒரு புள்ளி விபரம்.

அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்கள் எல்லாமே தமிழ்சினிமாவின் வழக்கமான ஃபார்முலாவை தகர்த்தெறிந்த படங்கள்தான். அது ஓடினாலும் ஓடாவிட்டாலும் கூட, சிம்புதேவனுக்கென்று தனி பாதை உருவானது. இந்த நேரத்தில் அவரும் விஜய்யும் இணைந்து ஒரு படத்தை வழங்கப் போகிறார்கள் என்றால் அது எப்படியிருக்கும்? விஜய் கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா படங்களை விரும்பி செய்கிறவர். ஆனால் சிம்புதேவன் படங்களோ வேறொரு ஃபார்முலாவில் இருக்கும். யார் யாரை டாமினேட் பண்ணப்போகிறார்களோ என்ற விமர்சனங்களும் எழுந்தது.

மாறியது சிம்புவல்ல, மாற்றியவர்தான் சிம்பு என்கிறார்கள் இப்போது. விஜய் ஒரே டைப்பான படங்களில் நடித்துக் கொண்டிருந்தாரல்லவா? இந்த படத்தில் குள்ள மனிதர்களுக்கு மத்தியில் நடிக்கப் போகிறாராம் அவர். அதாவது குள்ள மனிதர்கள் மட்டுமே வாழ்கிற தீவில் விஜய் சிக்கிக் கொள்வது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதுமட்டுமல்ல, இதே போன்ற படங்கள் ஹாலிவுட்டில் வந்திருந்தாலும், நாம் சிறுவயதில் காமிக்ஸ் புத்தகங்களில் படித்திருப்போமல்லவா? அந்த விறுவிறுப்புடன் இந்த படம் அமைக்கப்படவிருக்கிறதாம்.

விஜய்யின் கால்ஷீட் வெறும் முப்பதைந்து நாட்களுக்கு மட்டும் போதும் என்று கூறிவிட்டாராம் சிம்பு. மிச்சமெல்லாம் கிராபிக்ஸ். பொதுவாகவே விஜய் படங்கள் என்றால் குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள். இந்த குள்ள மனிதர்கள் கதையில் விஜய்யின் காமெடியும் ஆக்ஷனும் குழந்தைகள் ஏரியாவில் கொண்டாடப்படும் என்கிறார்கள் இப்போதே!

new filmsimbudevanSlidesmall humansvijay
Comments (0)
Add Comment