அரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போன விஜய் சேதுபதி பட பஞ்சாயத்து!

தமிழ்சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே சதீஷ். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘தங்க மீன்கள்’ போன்ற தரமான படங்களை துணிச்சலாக வாங்கி வெளியிட்டு வருபவர். சூப்பர் படத்தையும் சுமாரான படமாக்குகிற ஆட்கள் புழங்குகிற அதே ஏரியாவில்தான், சுமாரான படங்களையும் சூப்பராக ஓட வைக்குமளவுக்கு விளம்பர புலியாகவும் இருந்தார் சதீஷ். இவ்வளவு நல்ல குவாலிட்டிஸ் இருந்தாலும், பண விஷயத்தில் குணம் கெடாமலிருப்பது அரிய செயலாச்சே?

இவருக்கும் விநியோகஸ்தர் மணிகண்டன் என்பவருக்கும் ‘ரம்மி’ படம் வாங்கிய வகையில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து. (ரம்மி படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட்டவர் ஜே.எஸ்.கே சதீஷ்) இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக சதீஷிடம் இருந்து காசோலை ஒன்றை வாங்கியிருந்தாராம் மணிகண்டன். அது பேங்கிலிருந்து போன வேகத்தில் திரும்பிவிட்டது. உடனே சதீஷ் மீது வழக்கு தொடர்ந்தார் மணி. பல காலம் இழுத்தடித்த இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. உடனடியாக சதீஷுக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

அதிருக்கட்டும்… இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டாரல்லவா? அது ஏன் என்று தெரிந்தால், ‘தம்பி நல்லாயிருப்பா…’ என்று ஆளாளுக்கு தும்பிக்கை உயர்த்தி ஆசிர்வதிப்பீர்கள். ஏன் தெரியுமா? ரம்மி கதையை அப்படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் வந்து விஜய் சேதுபதிக்கு சொன்ன நேரம் நல்ல நேரமா? கெட்ட நேரமா? தெரியாது. ஆனால், விஜய் சேதுபதியின் நண்பரும், பிரச்சனைக்குரிய ‘வசந்தகுமாரன்’ படத்தின் இயக்குனருமான ஆனந்திற்கு நல்ல நேரம். தன் தங்கையின் திருமணத்திற்கு பணம் புரட்ட முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தாராம் அந்த நேரத்தில். நண்பனின் கவலையை பார்த்த விஜய் சேதுபதி ‘உனக்கு எவ்வளவு பணம் வேணும்?’ என்று கேட்க, ‘பதினாறு லட்சம் இருந்தா கல்யாணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சுருவேன்’ என்றாராம் ஆனந்த்.

உடனடியாக ரம்மி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி, வாங்கிய அட்வான்ஸ் தொகை 16 லட்சத்தை அப்படியே ஆனந்த் கையில் கொடுத்து அனுப்பி வைத்தாராம். ஒரு படத்தால் ஒருவருக்கு பணப்பிரச்சனை. இன்னொருவருக்கு மனசே குளிர்ந்தது. என்னவொரு தத்துவம்டா இது?!

பட்… நண்பனின் கவலையை போக்கிய விஜய் சேதுபதிக்கு காலம் கடந்த பாராட்டுகள்!

arrest warrantcourtjsk sathishrammySlidethangameengalvasanthakumaranvasanthakumaran issuevijay sethupathi
Comments (0)
Add Comment