தறிகெட்ட ரசிகர்கள்! தட்டி வைத்த விஜய்!

ரசிகர்கள் கட்டுக்கோப்பாக இருந்தாலும், சமயங்களில் தன் தலைவனுக்காக உயிரையே கொடுப்போம் என்று சிலிர்த்துக் கொண்டால், கிழிந்தது கிருஷ்ணகிரி. அப்படியொரு அசகாய அன்பர்கள் யார்? அஜீத், விஜய் ரசிகர்கள்தான் இணைய உலகத்தில் பாகுபலி வாள் போல கூராக திரிகிறார்கள். குத்திக் கொள்கிறார்கள். ரத்தம் கசிகிறார்கள். அவர்களுக்குள் இருந்த இந்த மோதல், ஐயோ பாவம்… ஒரு பெண் பத்திரிகையாளர் சிக்கிக் கொண்டதும் இன்னும் ரணகளமானது. நான்கு நாட்களாக சோஷியல் மீடியாவில் ஒரே வாந்தி பேதி.

பாலிவுட் ஹீரோ ஒருவரது படத்தை பார்த்துவிட்டு கமென்ட் அடித்த பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், “விஜய் நடித்த சுறா படத்திற்கு இது தேவலாம்” என்று பதிவிட்டிருந்தார். அவ்வளவுதான்… கமென்ட் என்ற பெயரில் போட்டு வெளுக்க ஆரம்பித்தார்கள் விஜய் ரசிகர்கள். இன்னதென்று காது கொடுக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை நடந்தது. தன்யாவுக்காக பரிந்து பேச வந்த அஜீத் ரசிகர்களையும், போங்கடா மூடிகிட்டு என்றவர்கள், அவர்களையும் சேர்த்து அர்ச்சித்தார்கள்.

நிலைமை மிக மோசமானது. வேறு வழியில்லாமல் சென்னை காவல் துறை ஆணையரிடத்தில் இன்று விஜய் ரசிகர்கள் மீது புகார் கொடுத்துவிட்டார் தன்யா. அதன் பேரில் இரண்டு விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜய். அதில் கூறப்பட்டிருப்பதாவது-

சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.. அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்.. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..

இதுதான் விஜய்யின் அறிக்கை. இதையடுத்து இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவோமாக!

actor vijayajithajith fansDhanya RajendranPolice complaint Against Vijay FansSocial Media WarSura tamil filmvijay fansWomens freedom
Comments (1)
Add Comment
  • Arunkumar

    Foolish Actor